நடிகை தேவயானியின் கோலங்கள் சீரியலுக்கு நான் ரசிகன்! மனம் திறந்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன்!
சென்னை: நடிகை தேவயானி நடிப்பில் ஒளிப்பரப்பாகிய கோலங்கள் சீரியலுக்கு தாம் மிகப்பெரிய ரசிகன் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியிருக்கிறார்.
கோலங்கள் நெடுந்தொடரை 1,000 எபிசோடுகளையாவது தாம் பார்த்திருப்பேன் என்றும் அந்தளவுக்கு கதைக்களம் கொண்ட ஒரு சீரியல் அது எனவும் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
கோலப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பதற்காக நடிகை தேவயானியை அழைத்து வந்து கவுரவித்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.

கோலப்போட்டி
சென்னை சைதாப்பேட்டையில் நடத்தப்பட்ட கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்றிரவு நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நடிகை தேவயானியை அழைத்து வந்து கோலப் போட்டியில் வென்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்க வைத்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன். அப்போது பேசிய அவர், நடிகை தேவையானிக்கு புகழாரம் சூட்டும் வகையில் அவர் குறித்த பல்வேறு சிறப்புகளை எடுத்துக் கூறினார்.

நடிகை தேவயானி
நடிகை தேவயானியை பொறுத்தவரை தனது மகளை பள்ளியில் சேர்த்ததோடு அதே பள்ளியில் ஊதியம் இல்லாமல் மகளுக்காக பயிற்றுநராக பணியாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் எனக் குறிப்பிட்டார். மேலும், நடிகை தேவயானி எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் கூட அதில் கிடைக்காத புகழும், பெயரும் கோலங்கள் சீரியலில் நடித்ததன் மூலம் கிடைத்திருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். 1,000 எபிசோடுகளை கடந்து பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகிய கோலங்கள் நாடகத்தை தாம் நாள் தவறாமல் பார்ப்பேன் எனக் கூறினார்.

அமைச்சர் மா.சுப்ரமணியன்
தொலைக்காட்சியில் சீரியல் பார்த்ததால் தன்னை சும்மா இருந்ததாக யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் கோலங்கள் நெடுந்தொடர் இரவில் டெலிகாஸ்ட் ஆனதால் அதை பார்க்க தனக்கு பெரிய சிரமம் ஏதும் இல்லை எனவும் கூறினார். மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக கோலங்கள் சீரியலுக்கு தாம் மிகப்பெரிய ரசிகன் எனக் கூறி கைதட்டல்களை அள்ளினார். கோலப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிக்க கோலங்கள் நாயகி தான் சரியாக இருப்பார் என்பதால் அவரை அழைத்து வந்ததாக தெரிவித்தார்.

அரசியல் நிகழ்ச்சி
நடிகை தேவயானியை பொறுத்தவரை அரசியல் மேடை ஒன்றில் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாகும். எந்தக் கட்சி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத தேவயானி, அமைச்சர் மா.சுப்ரமணியன் மீது வைத்திருக்கும் மரியாதை காரணமாக இந்த பரிசளிப்பு விழாவில் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications