நேற்றைல இருந்து நான் தான் கண்டெண்ட்ல.. அமைச்சரானாலும் மாறாத உதயநிதியின் குறும்பு.. ஒரே சிரிப்பலை
சென்னை: சென்னையில் இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‛‛நேற்றைல இருந்து நான் தான் உங்களுக்கு கண்டெண்ட்ல'' எனக்கூறியது அனைவரையும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இவர் ஏன் இப்படி கூறினார்?.
இந்தியாவில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்காக மத்திய அரசின் நிதி உதவியில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் இடையே ஆண்டுதோறும் தேசிய அளவில் விளையாட்டு போட்டி நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் வரும் 17 ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 177 மாணவ-மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.

ஆந்திரா செல்லும் மாணவர்கள்
இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த ஒரு மாதமாக சென்னையில் பயிற்சி வழங்கப்பட்டது. சென்னை மேல்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட்டது. இவர்கள் இன்று சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் புறப்பட்டு செல்ல உள்ளனர்.

உதயநிதி கலந்துரையாடல்
இந்நிலையில் தான் நேற்று விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார். இந்த வேளையில் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இது என்பதால் அதிக கவனம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் உதயநிதி மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தி பேசினார்.

பத்திரிகையாளர் சந்திப்பு
அதன்பிறகு உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில், ‛‛ஆரோக்கியமான விமர்சனங்கள் வையுங்கள். தமிழக முதல்வர் மிகப்பெரிய பொறுப்பை எனக்கு வழங்கி உள்ளார். தலைவர் (முதல்வர் ஸ்டாலின்) ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள் வழிக்காட்டல் மூலம் பணியை சிறப்பாக செய்ய முயற்சி செய்வேன். தேர்தல் அறிக்கையில் 234 தொகுதியில் மினி ஸ்டேடியம் அமைப்பதாக தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தோம். அந்த பணிக்கான இலக்கு தான் முதலாவதாக உள்ளது. விளையாட்டு துறையில் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பணிகள் இருக்கும்'' என்றார்.

நான் தான் கண்டெண்ட்ல
முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பை தொடங்கியபோது உதயநிதி ஸ்டாலின் ஜாலியாக, ‛‛நேற்றையில் இருந்து நான் தான் உங்களுக்கு கண்டெண்ட்டுல'' என சிரித்தபடி கூறினார். இதை கேட்டவுடன் அங்கிருந்த அமைச்சர் சேகர்பாபு உள்பட அனைவரும் சிரித்தனர். உதயநிதி நேற்று அமைச்சரான நிலையில் அவர் பற்றிய பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருவதால் தான் இவ்வாறு கூறினார். மேலும் மாணவர்கள் உடனான கலந்துரையாடல் எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு, மாணவர்களை திரும்பி பார்த்த உதயநிதி ‛‛அதுபற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும்'' என கூறினார்.












Click it and Unblock the Notifications