சித்தராமையா பிரதமரானால் சனாதன சக்திகள் தலை தூக்காது.. திருமாவளவன் பரபர பேச்சு
சென்னை: கர்நாடக எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவரான சித்தராமையா பிரதமராகினால் நாட்டில் எந்த காலத்திலும் சனாதன சக்திகள் தலைதூக்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர்கள் முதல் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவருமான சித்தராமையாவுக்கு ‛அம்பேத்கர் சுடர்' விருது வழங்கப்பட்டது.
அஞ்சுகிறதானு கேட்ட அழகிரி.. சித்தராமையா- முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு.. ஓ இதுதான் விஷயமா?
திருமாவளவன் பேச்சு
இந்த விழாவில் தொல் திருமாவளவன் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியுடன் உள்ள உறவு பற்றியும், சித்தராமையா குறித்து பெருமையாக கூறினார். அதேநேரத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்யை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த விழாவில் தொல் திருமாவளவன் பேசியதாவது:
காங்கிரஸால் தான் பாஜகவை வீழ்த்த முடியும்
இந்தியாவில் 90 சதவீத மக்கள் அடிமையாகவே உள்ளனர். காங்கிரசின் மூலம் தான் காங்கிரஸ் கூட்டணியுடன் தான் பாஜகவை வீழ்த்த முடியும். ஒரே நாடு ஒரே கலாச்சாரம் ஹிட்லர், ராஜபக்சே ஆகியோரின் கொள்கையாகும். இதுதான் ஆர்எஸ்எஸ் கொள்கையாகவும் உள்ளது. திருமாவளவன் காங்கிரஸ் கட்சியுடன் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். இதனை பற்றி நான் கவலைப்படுவது இல்லை. ஏனென்றால் சனாதன சக்திகளை வீழ்த்த வேண்டுமென்றால் தேசிய அளவில் காங்கிரஸ் உடன் கை கோர்க்க வேண்டியது அவசியமாக உள்ளது.
சித்தராமையா பிரதமரானால் என்ன?
பாஜக உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளின் உண்மையான எதிரி யாரென்றால் அம்பேத்கரும், அவர் எழுதிய அரசியலமைப்பு சட்டமும் தான். பாஜக சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல இந்து மக்களுக்கும் எதிரானது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆபத்து ஏற்படும். ஆனால் சமூக நீதிக்காக தன்னை ஒப்படைத்து கொண்ட தலைவர் சித்தராமையா. அரசு ஒப்பந்தம், பதவி உயர்வில் இடஒதுக்கீடு கொண்டு வந்த தலைவர் இந்தியாவிலேயே சித்தராமையா தான். மேலும் சனாதன சக்திகளை தூக்கி எறிய சித்தராமையா போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் தேவை. சமத்துவ சமூக நீதி கொள்கை பார்வை சித்தராமையாவிடம் உள்ளது. இதனால் சித்தராமையா ஏன் இந்தியாவின் பிரதமராக வர கூடாது?. இவர் பிரதமராக வந்தால், எந்த காலத்திலும் சனாதன சக்திகள் தலை தூக்க முடியாது.
பாஜகவை விரட்ட முடியும்
அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும் இணைந்து பாஜகவை வீழ்த்த உழைக்க வேண்டும். தமிழகத்தில் அதிமுக வழியாக பாஜக காலூன்ற நினைக்கிறது. இதனை தடுத்து பாஜகவை நம்மால் விரட்ட முடியும். அதேபோல் மத்தியிலும் பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க அனைவரும் ஒருசேர இணைந்து போராட வேண்டும்'' என்றார்.
பாஜக மீது பாய்ந்த சித்தராமையா
இந்த நிகழ்ச்சியில் சித்தராமையா பேசுகையில், ‛‛இடஒதுக்கீடு என்பது வாழ்வுரிமை, அடிப்படை உரிமையாகும். எவ்வளவு நாள் சாதி வேறுபாடு சாதி கட்டமைப்பு உள்ளதோ அவ்வளவு நாள் இடஒதுக்கீடு தேவை என அம்பேத்கர் கூறியுள்ளார். பாஜக ஒருபோதும் அரசியல் சட்டத்தை மதித்தது இல்லை'' என குற்றம்சாட்டினார்.
பிற விருதுகள் என்னென்ன?
மேலும் இந்த விழாவில் பெரியார் ஒளி விருது எழுத்தாளர் எஸ்வி ராஜதுரைக்கும், காமராஜர் கதிர் விருது விஜிபி உலக தமிழ் சங்க தலைவர் விஜி சந்தோசத்திற்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி செல்லப்பனுக்கும் வழங்கப்பட்டது. மேலும் காயிதேமில்லத் பிறை விருது எஸ்டிபிஐ தேசிய துணை தலைவர் தெகலான் பாகவிக்கும், செம்மொழி ஞாயிறு விருது தொல்லியல் அறிஞர் இராசனுக்கும், மார்க்ஸ் மாமணி விருது மறைந்த எழுத்தாளர் ஜவஹருக்கு வழங்கப்பட்டது.