விஜயலட்சுமி பலாத்காரம்- குற்றச்சாட்டு உறுதியானால் சீமானுக்கு 6 ஆண்டு ஜெயில்- நாம் தமிழர் கட்சி கதி?
சென்னை: நடிகை விஜயலட்சுமி பலாத்காரம் செய்யப்பட்டது, கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டது உள்ளிட்ட புகார்கள் மீதான விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதியானால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கக் கூடும் என்கின்றனர் சட்டவல்லுநர்கள். இதனால் நாம் தமிழர் கட்சியின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகும் நிலைமையும் உருவாக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
நடிகை விஜயலட்சுமி தம் மீது கொடுத்த பலாத்காரம் மற்றும் கட்டாய கருக்கலைப்பு புகாரை ரத்து செய்ய கோரி சீமான் தொடர்ந்த மனுதான் இப்போது அவரது தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. சீமான் மீதான புகாரை விஜயலட்சுமியே வாபஸ் பெற்றாலும் போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; சீமான் மீதான புகார் தீவிரமானது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்தி வரும் விசாரணையில் இதுவரை 15 சாட்சிகள் பங்கேற்றனர். இவர்கள் சீமானுக்கு எதிராக வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், விஜயலட்சுமி பல முறை கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்ட போது, கணவர் என்ற இடத்தில் சீமான் கையெழுத்திட்ட ஆவணத்தை விஜயலட்சுமி தரப்பு போலீசில் பாதுகாப்பாக கொடுத்திருக்கிறதாம். இதுதான் சீமானுக்கு எதிரான மிகப் பெரிய ஆதாரமாக இருக்கிறதாம்.
இதற்கு வலுசேர்க்கும் வகையில்தான் ஆண்மை பரிசோதனை மற்றும் குரல் பரிசோதனைக்குள்ளாக்கப்பட இருக்கிறார் சீமான். இந்த பரிசோதனைகளைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உண்மை; உறுதி என போலீசார் நிரூபிக்கும் நிலையில் சீமான் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படக் கூடுமாம்.
மேலும் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையிலும் சீமான், பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துவிட்டால் அப்போது சீமானுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறதாம். தற்போதைய நிலையில் அனைத்து சூழ்நிலைகளும் சீமானுக்கு எதிராக இருக்கிறது என்றே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி கதி என்னவாகும்?
அப்படி சீமானுக்கு 6 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தால், நாம் தமிழர் கட்சியின் எதிர்காலம் மிகப் பெரும் கேள்விக்குறியாகும் ஆபத்தும் உள்ளது. ஏனெனில் நாம் தமிழர் கட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீமானுக்கு வலதும் இடதுமாக இருந்த பல முன்னணி நிர்வாகிகள் அனைவருமே அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். சீமானின் சில நடவடிக்கைகளுக்கு திரைமறைவில் ஆதரவு தெரிவிக்கக் கூடிய நபர்கள்தான் இப்போது நாம் தமிழர் கட்சி பிரமுகர்களாக வலம் வருகின்றனர் என்கின்றனர் அக்கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள். இதனால் சீமானுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சியை கயல்விழி பொறுப்பேற்று நடத்துவாரா? அல்லது சீமானை முழு மூச்சாக ஆதரிக்கும் சர்ச்சைக்குரிய தம்பிகள் சிலர் பொறுப்பேற்று நடத்துவார்களா? என்கிற விவாதமும் அரசியல் வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications