அதிமுகவில் எல்லோரும் ஒன்றுபட வேண்டும்.. தனிநபர் சர்வாதிகாரம் நடக்காது.. ஜெ. சமாதியில் ஓபிஎஸ் பேட்டி
சென்னை: கடந்த ஜூலை 11ம் தேதியன்று கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், அதிமுகவை தனிநபரின் சர்வாதிகாரத்திற்கோ, ஒரு குடும்பத்திற்கோ மட்டும் இக்கட்சியை கொண்டு செல்ல நினைத்தால் அது நடக்காது என்று கூறியுள்ளார்.
அதிமுகவில் புதிய பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவதாக கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, ஓபிஎஸ் தரப்பில் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும், ஜூன் 23க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார். மேலும், இந்த ஆண்டு ஏற்கெனவே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மற்றொரு பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த தீர்ப்பையடுத்து ஓபிஎஸ் தரப்பினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர்.
இது குறித்து ஈபிஎஸ் ஆதரவாளர் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், "இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்துள்ள வெற்றி என்பது நிரந்தரமானது கிடையாது" என்று கூறியுள்ளார். மேலும், "இந்த தீர்ப்பு நிச்சயம் இறுதியான தீர்ப்பு கிடையாது. இதுவரை நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் கட்சியின் விதிகளின்படியே நடந்துள்ளது. எனவே இதன் பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பின்னர் முடிவெடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், "அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்றைக்கும் ஜெயலலிதாதான் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வேன். அதிமுகவின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும்" என்றும், "அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது" எனவும் கூறியிருந்தார்.
இதனையடுத்து தற்போது மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தொண்டர்களின் இயக்கமாக இக்கட்சியை உருவாக்கினார் எம்ஜிஆர். இதை யாராலும் வெல்ல முடியாத கட்சியாக இதை உருவாக்கினார் ஜெயலலிதா. நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. இதை அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக அளிக்கின்றோம்" என்று கூறினார்.
மேலும், "இது தொண்டர்களின் இயக்கம். இதை பிளவுபடுத்த நினைத்தால் அது நடக்காது. தனிநபரின் சர்வாதிகாரத்திற்கோ, ஒரு குடும்பத்திற்கோ மட்டும் இக்கட்சியை கொண்டு செல்ல நினைத்தால் அது நடக்காது. இது அதிமுகவிற்கு முழுமையான வெற்றி. அனைவரும் ஒன்றுபட வேண்டும். யாரெல்லாம் கட்சியின் கோட்பாடுகளுடன் இசைந்து வருகிறார்களோ அவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அவமானங்களை யார் ஏற்படுத்தினாலும் அதை தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அதை பொறுத்துக்கொண்டு அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் எனும் அண்ணாவின் வழியில் நாங்கள் செயல்படுவோம்" என்று கூறினார்.