தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்..ஆனாலும் அதி கனமழை இருக்கு..இந்திய வானிலை ஆய்வு மையம்
சென்னை: நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று அதிகனமழையும், 13-ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக, புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். அடுத்த இரு தினங்களில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து செல்லக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ரெட் அலர்ட்
கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதன் காரணமாக 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே சீர்காழியில் 43 செமீ மழை பெய்துள்ளதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

புதிய காற்றழுத்தம்
இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. நவம்பர் 16ஆம் தேதி மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ரெட் அலர்ட் வாபஸ்
தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே நேரம் தமிழ்நாட்டில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் , தமிழகத்தில் இன்று அதிக கன மழையும் நாளை 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நேற்று விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் அம்மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கனமழையின் காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications