மழை வருது..மழை வருது! தீபாவளியும் வருது! டார்கெட் வேற இருக்கும்ல! டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த உத்தரவு
சென்னை : மழைக்காலம் வரவுள்ள நிலையில் தீபாவளிப் பண்டிகையையொட்டி விற்பனை இலக்கும் நிர்ணையிக்கப்படுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம் முக்கிய சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.

டாஸ்மாக்
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும். மேலும் காந்தி ஜெயந்தி சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

விற்பனை டார்கெட்
இதன் காரணமாக முதல் நாளே குடிகாரர்கள் அதிக அளவில் மதுபான பாட்டில்களை வாங்கிக் குவிப்பதால் அப்போதும் மதுவிற்பனை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடும். இந்நிலையில் தீபாவளிப் பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த ஆண்டு 'சரக்கு விற்பனை புதிய உச்சத்தை தொடுமா என்பதே டாஸ்மாக் அதிகாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தாண்டு எவ்வளவு?
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இரண்டே நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது. குறிப்பாக தீபாவளிக்கு முந்தைய நாளில் 205.61 கோடிக்கும், தீபாவளி தினத்தன்று மட்டும் 225.42 கோடி ரூபாய்க்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு 500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றறிக்கை
இந்நிலையில் மழைக்காலம் என்பதாலும் தீபாவளிப் பண்டிகை வரவுள்ளதாலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு முக்கிய சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில்,"மதுபான கிடங்குகளில் உள்ள சரக்குகள், பதிவேடுகள், கோப்புகளுக்கு எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினால் எந்தவித சேதாரமும் ஏற்படாத வண்ணம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு பாதுகாப்பான முறையில் வைத்து கொள்ள வேண்டும், தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள மதுபான சில்லரை விற்பனை கடைகளில் இருப்பில் உள்ள மதுபான பெட்டிகள், பதிவேடுகள் மற்றும் கோப்புகள் மழை மற்றும் வெள்ளநீரால் பாதிக்கப்படாதவாறு தரையில் இருந்து உயர்த்தப்பட்டு பாதுகாப்பான முறையில் விற்பனை செய்ய வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications