“ஆட்சிக்கு வந்து 1,724 நாள்.. 8,658 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன்” - சட்டசபையில் சொன்ன ஸ்டாலின்
சென்னை: "நான் ஆட்சிப் பொறுப்பேற்று 1,724 நாட்களாகின்றன. இதில் 8,658 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். 15,117 அரசு கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.29,000 வழங்கி உள்ளோம்." என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் பேசியுள்ளார்.
தமிழக சட்டசபை கடந்த 20 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதம் பாடப்படவில்லை என்று குற்றம்சாட்டி தனது உரையை புறக்கணித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அதன்பிறகு, ஆளுநரின் தமிழாக்க உரையை சபாநாயகர் மு.அப்பாவு வாசித்தார். இது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.

அடுத்த நாள் (21 ஆம் தேதி) சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னுசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவந்து அவை நடவடிக்கை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 22 ஆம் தேதி முதல், ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள்.
கடந்த 2 நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், எம்.எல்.ஏக்கள் துறை சார்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலுரை கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, 5வது நாளான இன்று சட்டசபையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதிலுரை இடம் பெற்றது. ஆனால், முதலமைச்சரின் உரையை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க புறக்கணித்தது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க உறுப்பினர்கள் யாரும் இன்று அவைக்கு வரவில்லை.
இந்நிலையில், சட்டசபையில் பதிலுரை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், "திராவிட மாடல் அரசின் சாதனைகளால் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. மக்கள் மனநிறைவு அடையும் வகையில் ஆட்சியை வழங்கியுள்ளோம். தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக வெற்றி பெற்ற போது ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு பக்கம் எனக்கு கவலையும் இருந்தது. அதனை நான் மறைக்க விரும்பவில்லை. இந்தப் பொறுப்பை நான் எப்படி செய்யப் போகிறேன்? வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? மக்கள் விரும்பும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா? மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலை தான் எனக்கு இருந்தது.
பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து வகையிலும், அனைத்துத் துறையிலும் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்து, மோசமான நிலையை அடைந்திருந்தது. நமக்கு மேலே இருக்கும் ஒன்றிய அரசு ஒத்துழைக்காத ஓரவஞ்சனை அரசாக இருந்தது. இடியாப்பச் சிக்கல் என்று சொல்வார்களே, அத்தகைய சூழலில் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம்.
இன்றைக்கு தமிழ்நாடு மற்றமாநிலங்களை விட அதிகம் வளர்ந்துள்ளது. மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை அண்ணாந்து பார்க்கின்றன. ஆறாவது முறை ஆட்சி அமைந்த போது, அது விடியல் ஆட்சியாக அமையும் என்றோம். அந்த விடியலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏற்படுத்தித் தந்துள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகள், வரப்போகும் ஒளிமயமான எதிர்காலத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளன. கோடிக்கணக்கான மக்கள் மனங்களிலும் முகங்களிலும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் நான் பார்க்கிறேன்.
அளவுக்கு அதிகமான சோதனைகளை எதிர்கொண்டவன் நான் தான். எந்த சோதனைகளும் எனக்குப் புதிதல்ல. என்னைச் சீண்டிப்பார்ப்பவர்கள் மனசுக்குள் மகிழ்ச்சி அடையலாமே தவிர, அது என் மனதை எதுவும் செய்யாது. என்னுடைய இலக்குகளை நான் வென்றுவிட்டேன். தமிழ்நாடு தலை நிமிர்ந்துள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்று 1,724 நாட்களாகின்றன. இதில் 8,658 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். 15,117 அரசு கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை சென்றுள்ளேன். 21 மாவட்டங்களில் மாபெரும் அரசு நலத்திட்ட விழாக்களில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளேன்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.29,000 வழங்கி உள்ளோம். விடியல் பயணம் மூலம் ஒவ்வொரு மகளிரும் ரூ.60000 வரை சேமித்துள்ளனர். மக்களுக்காக வாழ்ந்தேன், தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தேன் என்பது புகழ்ச்சி அல்ல, உண்மை" என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications