கடந்த 24 மணி நேரம்.. தமிழ்நாட்டில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு.. சென்னையில் மட்டும் இருவருக்கு உறுதி!
சென்னை: சீனா, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அச்சம் மீண்டும் எழ தொடங்கியுள்ளது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2020ல் சீனாவில் தொடங்கி பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளிலும் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தடுப்பூசி மூலம் சிறிது சிறிதாக சூழல் கட்டுக்குள் வந்தன. அதுமட்டுமல்லாமல் உலக நாடுகளில் பலவிதமான மாற்றங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டது. பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வாழ்க்கை முறை என அனைத்து வகையிலும் ஏராளமான மாறுதல் ஏற்பட்டன.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலையும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், 2021ம் ஆண்டு தீவிரமாக பரவிய கொரோனா மெல்ல மெல்ல குறைந்து கட்டுக்குள் உள்ளது. இந்த நிலையில் சீனாவில் ஓமிக்ரானின் புதிய திரிபான பிஎப் 7 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் ஹாங்காங், அமெரிக்கா, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது.
இந்த புதிய உருமாற்ற வைரஸ் பெரும்பாலும் மேல் சுவாசக் குழாயை பாதிக்கிறது. காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் ஆகியவை அறிகுறிகளாக கொண்டுள்ளன. இந்த வைரஸ் குஜராத் மாநிலத்தில் 3 பேருக்கும், ஒடிஸா மாநிலத்தில் ஒருவருக்கும் பரவியுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் பிஎப் 7 வேரியண்ட் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய கொரோனா உருமாற்றம் தமிழகத்தில் பரவாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வேளை வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் யாருக்கேனும் கொரோனா அறிகுறிகள் இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருக்கிறது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தமாக 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், மரபணு மாற்ற கொரோனா வைரஸை கண்டறிய தேவையான கட்டமைப்புகள் தமிழகத்தில் இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், வழக்கமாக பின்பற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினாலே போதுமானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications