தமிழகத்தில் 16லட்சம் பேர் உரிய நேரத்தில்.. 2ஆம் டோஸ் செலுத்தவில்லை.. காரணம் பற்றாக்குறையா? அலட்சியமா
சென்னை: தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 16.12 லட்சம் பேர் சரியான நேரத்தில் 2ஆவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளவில்லை. ஒருவர் 2 டோஸ் தடுப்பூசியைச் சரியான கால இடைவெளியில் போட்டால் மட்டுமே அவருக்குத் தடுப்பூசியின் முழு பலன் கிடைக்கும்.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே வேக்சின் போடப்பட்ட நிலையில், அதன் பிறகு அது படிப்படியாக விரிவு படுத்தப்பட்டது.
தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் முதலில் தயக்கம் காட்டினர். இருப்பினும், விரைவில் அந்த தயக்கம் களைந்து வேக்சின் பணிகள் வேகம் பெற்றது.

இந்தியாவில் 3.86 கோடி பேர்
அதேநேரம் கொரோனா முதல் டோஸை போட்டுக் கொள்பவர்கள் சரியான நேரத்தில் இரண்டாவது டோஸை போட்டுக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 3.86 கோடி பேர் சரியான நேரத்தில் 2ஆம் டோஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவில்லை என மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தது.

தமிழகத்தில் 16 லட்சம் பேர்
இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 16,12,623 பேர் சரியான நேரத்தில் 2ஆம் டோஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவில்லை. 10,48,575 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியையும் 5,64,048 பேர் கோவாக்சின் தடுப்பூசியையும் சரியான கால இடைவெளியில் செலுத்திக் கொள்ளவில்லை. இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி 4 முதல் 6 வாரக் கால இடைவெளியிலும் கோவிஷீல்டு தடுப்பூசி 12 முதல் 16 வாரக் கால இடைவெளியிலும் எடுத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

சென்னை தான் டாப்
மாவட்ட வாரியாக பார்க்கும்போது, சென்னையில் தான் அதிகபட்சமாக சுமார் 3 லட்சம் பேர் சரியான நேரத்தில் 2ஆம் டோஸ் வேக்சினை போட்டுக் கொள்ளவில்லை. தலைநகரில் 1.27 லட்சம் பேர் கோவாக்சினையும் 1.70 லட்சம் பேர் கோவிஷீல்டையும் சரியான நேரத்தில் 2ஆம் டோஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து கோவையில் 45,759 பேர் கோவாக்சின், 86,035 பேர் கோவிஷீல்ட் என மொத்தம் 1.5 லட்சம் பேர் சரியான நேரத்தில் 2ஆம் டோஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேபோல திருச்சியில் மொத்தம் 55,826 பேர் இரண்டாவது டோஸை சரியான நேரத்தில் போட்டுக் கொள்ளவில்லை.

வேக்சின் பற்றாக்குறை
வேக்சின் 2ஆம் டோஸ் சரியான நேரத்தில் போடாமல் விடுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. முதலில் தடுப்பூசி பற்றாக்குறை. கொரோனா தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு கொரோனா வேக்சின் உற்பத்தி இல்லை. இதனால் பல பகுதிகளில் அவ்வப்போது வேக்சின் பணிகள் பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் 2ஆம் டோஸை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க இதுவொரு முக்கிய காரணமாக உள்ளது.

அலட்சியம்
இதுமட்டுமின்றி 2ஆம் அலை உச்சத்திலிருந்த சமயத்தில் தான் தமிழக மக்களிடையே கொரோனா வேக்சின் மீது இருந்த தயக்கம் மெல்ல நீங்கியது. அப்போது தான் பலரும் ஆர்வத்துடன் வேக்சின் எடுத்துக் கொள்ளத் தொடங்கினர். குறிப்பாக, அப்போது வேக்சின் பற்றாக்குறை அதிகமாக இருந்ததால் பல தடுப்பூசி மையங்களில் வேக்சின் போட முடியாமல் திரும்பிய பொதுமக்களுக்கும் சுகாதாரத் துறையிருக்கும் இடையே வாக்குவாதமும் சில இடங்களில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இப்போது 2ஆம் அலை கட்டுக்குள் வந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில், கொரோனா மீது மக்களிடம் இருந்த அச்சம் குறைந்துவிட்டது. இந்த அலட்சியம் காரணமாகவும் பொதுமக்கள் சரியான நேரத்தில் வேக்சின் எடுக்கத் தவறுவதாகச் சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications