Vijay: இது முதல் முறை இல்லை.. வருமான வரித்துறை வளையத்தில் விஜய்.. 2015ல் என்ன நடந்தது தெரியுமா?
Recommended Video
சென்னை: நடிகர் விஜய் வீட்டில், வருமான வரித்துறை இன்று சோதனை நடத்துகிறது. ஆனால் இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே, புலி திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பு, 2015ம் ஆண்டில் விஜய் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனைகள் நடத்தினர்.
நெய்வேலியில் மாஸ்டர் படப் பிடிப்பில் இருந்த விஜய், வருமான வரித்துறையினரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். இதையடுத்து அவர், சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.
அதேநேரம், சென்னையிலுள்ள விஜய் வீடுகளில் வருமான வரித்துறை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இரண்டாவது முறை
விஜய் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட பிறகு, அவரது முன்னிலையில், வங்கி லாக்கர்களை திறந்து சோதனை நடத்தும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், விஜய் இப்படி வருமான வரித்துறையின் பிடிக்குள் வளைக்கப்படுவது இது முதல் முறை கிடையாது. 2015ம் ஆண்டு செப்டம்பரில் விஜய்யின் வீட்டில், ஐடி ரெய்டுகள் நடந்தன. புலி திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன் இந்த சம்பவம் நடந்து பரபரப்பாக பேசப்பட்டது.

நயன்தாரா
அந்த நேரத்தில், நடிகையர்கள் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோரின் வீடுகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது நடந்த சோதனைகளைத் தொடர்ந்து, விஜய் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி செய்திகள் வெளியாகின. ஆனால் அதை மறுத்து விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

விஜய் மறுப்பு
"நான் வரி ஏய்ப்பு செய்தேனா, இல்லையா என்று விசாரிக்க எனது அலுவலகத்திலும் வீட்டிலும் சோதனை நடத்தினர். எனது குடும்பத்தினரும் ஊழியர்களும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கினர். எனது வருமான வரி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களுடன் வழங்கினர்" என்று விஜய் 2015ம் ஆண்டு, அக்டோபரில் வெளியிட்ட அறிக்கையில், தெரிவித்திருந்தார்.

சர்ச்சை படங்கள்
விஜய் செய்திகளில் அடிபடுவது அரிதான சம்பவம் இல்லை. பிகிலுக்கு முன் விஜயின் கடைசி இரண்டு படங்களான மெர்சல் மற்றும் சர்க்கார் ஆகியவையும் சர்ச்சையில் சிக்கின. மெர்சலை அட்லீ இயக்கினார். சர்கார் படத்தை இயக்கியது ஏ.ஆர்.முருகதாஸ். மெர்சல் படத்தில், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றன. எனவே தமிழக பாஜக தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு குரல் எழுப்பினர். விஜய் கிறிஸ்தவர் என்பதால் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை பரப்புகிறார் என எச்.ராஜா குற்றம்சாட்டினார்.

ராஜா சீற்றம்
விஜய்யின் வாக்காளர் ஐடியை ட்வீட் செய்த எச்.ராஜா, அதில் அவரது முழுப்பெயர் ஜோசப் விஜய் என்றுதான் உள்ளது, இதனால்தான் அவர் மத்திய அரசை குறி வைத்து தாக்கினார் என்று குற்றம்சாட்டினார். கோயிலுக்கு பதிலாக மருத்துவமனை கட்டப்பட வேண்டும் என்று விஜய்யின் கதாபாத்திரம் கூறுவது போல ஒரு காட்சி மெர்சல் படத்தில் இடம் பெற்றதையும் ராஜா மிக கடுமையாக சாடினார்.

தொடர்ந்து விசாரணை
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் ரெய்டு நடந்த நிலையில், திடீரென விஜயும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். எத்தனையோ முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் விஜய் போலவே சம்பளம் ஈட்டும் நிலையில், எதற்காக விஜய் வீடுகளில் மட்டும் அடிக்கடி வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது என்பதற்கான பதிலை வருமான வரித்துறை வெளியிடுமா என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications