"பரபரப்பு, பதற்றம், அதிர்ச்சி" வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி!
சென்னை: கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், இன்று நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியே அதிக பரபரப்புடன் இருந்த போட்டியாக கருதப்படுகிறது.
பரபரப்பு.. செய்திகள், தொலைக்காட்சிகளில் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இதுவும் ஒன்று. ஆனால் பரபரப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பதை இன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி கொடுத்துள்ளது.
ஒரு வாரத்திற்கு மேலாக உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு பில்டப்கள் கொடுக்கப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி அபார வெற்றியை பதிவு செய்ததால், இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்ற கேள்வியும் சேர, போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியது.
ஆரம்பமே 4 விக்கெட்.. மாஸ்டர் பிளான்.. ஸ்மார்ட்டாக ஆடிய கோலி! பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது எப்படி?
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்
இந்த சூழலில் தான் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற்றது. தீபாவளிக்கு ஒருநாள் முன் நடக்கும் போட்டி என்பதால், இந்தியா வெற்றிபெற வேண்டும், அப்போது தான் தீபாவளி கொண்டாட்டம் ஒருநாள் முன்னதாக தொடங்கும் என்று ஏராளமான ரசிகர்களும் வேண்டுதலை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
அர்ஷ்தீப் சிங்
இந்தப் போட்டி மீது வைக்கப்பட்ட அத்தனை எதிர்பார்ப்புகளையும் துளி நிமிடம் கூட பிசகாமல் மக்களை உறைய வைத்து, அதிர்ச்சி கொடுத்து, பரபரப்பை ஏற்படுத்தி, இன்னும் சொல்லப்போனால் பயத்தை கொடுத்து இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. அண்மையில் ஆசியக் கோப்பையின் போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சொதப்பிய அர்ஷ்தீப் சிங், இன்றையப் போட்டியில் விமர்சித்த அனைவருக்கும் பதிலடியை கொடுத்தார். 4 ஓவர்களுக்கு 32 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவது எளிதாக விஷயமல்ல.
12வது ஓவர் அதிரடி
மறுபக்கம் வழக்கம் போல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனால் விராட் கோலி என்னும் அசகாய சூரனும் எதையும் செய்து முடிக்கும் ஹர்திக் பாண்டியாவும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை சிதறடித்தனர். பாகிஸ்தான் அணியை போலவே 12வது ஓவரில் தொடங்கிய அதிரடியும், பரபரப்பும் ஒவ்வொரு பந்துக்கும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
விராட் கோலி, அஸ்வின்
அதேபோல் அஸ்வினை பந்துவீச்சுக்காக மட்டுமல்லாமல், பேட்டிங்கிற்கும் சேர்த்தே அணிக்கு தேர்வு செய்தது ரோஹித் ஷர்மாவின் வார்த்தைகளில் மறைமுகமாக இருந்தது. அதற்கேற்ப கடைசி பந்தில் அடித்த பவுண்டரியும், அதற்கு முன் வீசிய வொய்டை சரியாக கணித்ததும் அவரது கவனத்தையும் , முதிர்ச்சியையும் ரசிகர்களுக்கு கண்ணாடி போல் காட்டியுள்ளது. அதேபோல் பீஸ்ட் மோடில் விராட் கோலி ஆடிய ஆட்டம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றும் மறக்காமல் இருக்கும்.