அடிச்சுவிட்ட ஷர்மிகா.. பீஃப், மார்பகம் பற்றி “ஷாக்” தகவல்! இந்திய மருத்துவமுறை இயக்குநரகம் நோட்டீஸ்
சென்னை: பீஃப், மார்பகம், குலோப்ஜாமூன், நுங்கு என பல விசயங்கள் தொடர்பாக அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை சித்த மருத்துவர் ஷர்மிகா யூடியூப் சேனல்களில் பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்த நிலையில், தன்னுடைய கருத்துக்கள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அவருக்கு இந்திய மருத்துவமுறை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பாஜகவில் மாநில சிறுபான்மை பிரிவு தலைவரான டெய்சியின் மகளான சித்த மருத்துவர் ஷர்மிகா, ஏராளமான யூடியூப் சேனல் நேர்காணல்களில் தொடர்ந்து மருத்துவக் குறிப்புகளை வழங்கி வருகிறார். இதனால் இவரும் மக்கள் மத்தியில் பிரபலமாக மாறி இருக்கிறார்.
இவர் சித்த மருத்துவம் சார்ந்த ஆலோசனை யூடியூப் சேனல்களில் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் சமீப காலமாக அதிகளவில் விமர்சிக்கப்படும் நபராக மாறி இருக்கிறார். தன்னுடைய நேர்காணல்களில் மருத்துவம் என்ற பெயரில் அறிவியலுக்கு புறம்பான மூட நம்பிக்கைகளை புகட்டுவதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்து இருக்கின்றன.

மாட்டுக்கறிக்கு எதிராக பேச்சு
மாட்டுக்கறி சாப்பிடுவது தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசிய ஷர்மிகா, அறிவியலை ஓரம் வைத்துவிட்டு பேசுவோம் என்று தொடங்கினார். "நம்மை விட பெரிய விலங்கை சாப்பிட்டால் செரிமானம் செய்யமுடியாது. பீஃப் நம்மை விட பெரிய விலங்கு என்பதால் அதை சாப்பிடக்கூடாது." என்று கூறியதும் சர்ச்சைக்கு உள்ளானது.

குழந்தை பேறு
குழந்தையின்மை தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசிய அவர், "கடவுள்தான் குழந்தை பிறக்க மனசு வைக்க வேண்டும். பாலியல் உறவு வைத்துக்கொள்வது, உடல்நலக் குறைபாடு போன்ற அனைத்தும் அடுத்தடுத்த காரணங்கள்தான். இதன் முதல் காரணம் இயற்கை உங்களுக்கு குழந்தை பெறும் வாய்ப்பை தர வேண்டும் என்பதுவே.

இயற்கை ஒத்துழைக்க வேண்டும்
இதற்கு இயற்கையும் ஒத்துழைக்க வேண்டும் என்பதை நான் வலுவாக நம்புகிறேன். ஒருவர் செய்த தீமையான காரியங்களால் வாரிசு இருக்கக்கூடாது என்றால் இருக்காது. ஒரு நல்ல மனுதன், எந்த பிரச்சனையும் செய்யாதவர் என்றால் அடுத்தடுத்த குழந்தை பாக்கியம் கிடைக்கும்." என்று அவர் பேசியும் அறிவியலுக்கு புறம்பான கருத்து என்று பலர் விமர்சித்து வருகிறார்கள்.

சர்ச்சை கருத்துக்கள்
"குளோப் ஜாமூன் சாப்பிட்டால் ஒரு நாளில் 3 கிலோ எடை கூடும், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாக நல்ல வடிவத்தில் கிடைக்கும், தினசரி 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் அழகாகும், குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும்." என்றெல்லாம் பல கருத்துக்களை ஷர்மிகா தெரிவித்து வருகிறார்.

ஹோமியோபதி இணை இயக்குநர்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன் கண்டனம் தெரிவித்தார். "மருத்துவ நெறிகளுக்கு எதிராக பேசும் டாக்டர் ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று சித்த மருத்துவம் கூறவில்லை. ஷர்மிகா சொல்வதற்கு மருத்துவ ஆதாரம் இல்லை." என்றார்.

ஷர்மிகாவுக்கு நோட்டீஸ்
இந்த நிலையில் மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவ முறைகளுக்கான இயக்குநரகம் தற்போது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இணையதளம் வாயிலாக தவறான மருத்துவ தகவல்களை பகிர்வதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் விசாரணைக் குழுவின் முன் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என இந்திய மருத்துவமுறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications