தமிழக மீனவரை துப்பாக்கியால் சுட்ட இந்திய கடற்படை வீரர்கள்.. மெரைன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
நாகப்பட்டினம்: தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மீனவரின் உறவினர்கள் புகார் அளித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்கிய இந்திய கடற்படை வீரர்கள் மீது வேதாரண்யம் மெரைன் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் பகுதியில் இருந்து கடந்த 15 ஆம் தேதி செல்வம் என்பவருக்கு சொந்தமான ஆழ்கடல் மீன்பிடி படகில் 10 பேர் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் குறிப்பிட்ட நாட்கள் படகிலேயே தங்கி இருந்து ஆழ் கடலில் மீன்பிடிப்பது வழக்கம்.
இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவில் கோடியக்கரை அருகே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துள்ளனர். அந்த பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். பங்காரா என்ற கப்பல் ரோந்து வந்துள்ளது.
அந்த மீன்பிடி படகில் 10 மீனவர்கள் இருந்த நிலையில் இந்திய கடற்படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு, படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு
அதேவேளையில், நடுக்கடலில் மழை பெய்து கொண்டிருந்ததால் கடற்படையினரின் எச்சரிக்கையை கவனிக்காமல் மீனவர்களின் படகு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த இந்திய கடற்படையினர், கப்பலில் இருந்தபடியே மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
மீனவர் படுகாயம்
இந்த துப்பாக்கிச்சூட்டில் படகில் இருந்த மயிலாடுதுறை மாவட்டம் மானகிரியை சேர்ந்த மீனவர் வீரவேல், 32 என்பவர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து, படுகாயம் அடைந்தார். மேலும், அவர் ரத்த வெள்ளத்தில் படகிலேயே சுருண்டு விழுந்துள்ளார். இதைக் கவனித்து, அந்த படகின் அருகில் வந்து பார்த்த இந்திய கடற்படையினர், நிலைமையை உணர்ந்து முதல் உதவி சிகிச்சை கொடுத்துள்ளனர். பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஹெலிகாப்டரில் மீட்பு
அவசர நிலையை உணர்ந்து உச்சிப்புளியில் இருந்து கடற்படை ஹெலிகாப்டர் விரைந்து சென்றுள்ளது. நடுக்கடலில் படகில் உயிருக்கு போராடிய வீரவேலை உடனடியாக மீட்டு ஹெலிகாப்டரில் ஏற்றி உச்சிப்புளி கடற்படை விமான தளத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவருக்கு மீண்டும் முதல் உதவி அளித்து, தயார் நிலையில் நிறுத்தி இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மதுரையில் சிகிச்சை
மீனவர் வீரவேல் உடலில் 2 இடங்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பது தெரியவந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை ஆகியோர் பாதிக்கப்பட்டவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி விசாரித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு வீரவேல் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கடற்படை விளக்கம்
இது தொடர்பாக இந்திய கடற்படை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "இந்தியா- இலங்கையை பிரிக்கும் பாக் ஜலசந்தி கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லை கோட்டிற்கு அருகில் இன்று அதிகாலை இந்திய கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான வகையில் படகு ஒன்று காணப்பட்டது. பலமுறை எச்சரித்தும் படகு நிற்கவில்லை. வழக்கமான நடைமுறைகளின்படி எச்சரிக்கை மீறி சென்றதால் துப்பாக்கியால் சுடப்பட்டது. இதில் சந்தேகத்திற்கிடமான வகையில் படைகள் பயணித்த ஊழியர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
மீனவருக்கு சிகிச்சை
காயமடைந்த நபருக்கு கப்பல் மூலம் முதலுதவி அளிக்கப்பட்டு, இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ் பருந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மருத்துவ ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கடிதம்
மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தமிழக மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இந்திய கடற்படைக்கு எதிராக தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் 10 மீனவர்கள் தங்களது விசைப்படகில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஐ.என்.எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர், இம்மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், திரு. வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்து, அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருவதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.
வருத்தமான செயல்
இச்சம்பவத்தில் இந்தியக் கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் நன்கு அறிவார்கள். இந்தியக் கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது என்றும் தனது கடிதத்தில் தெரிவித்து உள்ளார். எனவே, மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்நிலையில், மீனவரை துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் இந்திய கடற்படை வீரர்கள் மீது வேதாரண்யம் மரைன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கொலைமுயற்சி பிரிவின் கீழ் இந்திய கடற்படை வீரர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மரைன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த துப்பாக்கி சூடு எதிரொலியாக இந்திய கடற்படைக்கு சொந்தமான ராமநாதபுரம் உச்சிப்புளி விமானப்படை தளத்திற்கு (ஐ.என்.எஸ்) போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படை வீரர்கள் மீது தமிழகத்தில் வேதாரண்யம் மெரைன் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.