சஞ்சய் அரோரா ஐபிஎஸ் வீட்டில் குடியிருந்த ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை.. சிக்கிய கடிதம்.. ஷாக் தகவல்!
சென்னை : டெல்லி காவல்துறை கமிஷனராக பணியாற்றி வரும், தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சய் அரோராவின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ரியல் எஸ்டேட் அதிபர் மதுசூதனன் ரெட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருகம்பாக்கம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து, ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட மருத்துவரும் ரியல் எஸ்டேட் அதிபருமான மதுசூதனன் ரெட்டி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
குடும்ப பிரச்சனை மற்றும் தொழில் நஷ்டம் ஆகியவற்றின் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரி வீட்டில்
சென்னை விருகம்பாக்கம், நடேசன் நகரில், ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பின் 14 வது மாடியில், டெல்லி போலீஸ் கமிஷனராக பணியாற்றி வரும், தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சய் அரோரா வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக, துாத்துக்குடியை சேர்ந்த மதுசூதனன் ரெட்டி (69) என்பவர் தன் மனைவி பத்மாவதி மற்றும் மகள் பூர்ணிமா ஆகியோருடன் வசித்து வந்தார்.

ரியல் எஸ்டேட் அதிபர்
ஓய்வு பெற்ற மருத்துவரான மதுசூதனன் ரெட்டி, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில், 14வது மாடியில் பால்கனியில் நடந்து கொண்டிருந்த மதுசூதனன் ரெட்டி, திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தம் கேட்டு காவலாளிகள் ஓடி வந்து பார்த்தபோது, மதுசூதனன் ரெட்டி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை கடிதம்
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மதுசூதனன் ரெட்டியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மதுசூதனன் ரெட்டி, தற்கொலை தொடர்பாக எழுதி வைத்திருந்த எட்டு பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மன உளைச்சல்
2 ஆண்டுகளுக்கு முன், மதுசூதனன் ரெட்டி, தன் மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆறு மாதங்களுக்கு முன் கணவரை பிரிந்த அவரது மகள், இவரது வீட்டுக்கே வந்தார். இதனால், மதுசூதனன் ரெட்டி மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தற்கொலைக்கு காரணம்
மேலும், ரியல் எஸ்டேட் தொழிலிலும் அவருக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர், தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மதுசூதனன் ரெட்டி எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதத்திலும், இதையே காரணமாகச் சொல்லி இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications