ஓராண்டில் 7 லாக்கப் மரணங்கள்.. தமிழக அரசு இயங்குகிறதா.. கேட்கிறார் அண்ணாமலை..!
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, காவல்நிலையங்களுக்கு சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் விதைத்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ராஜசேகர் காவல் நிலையத்தில் மரணமடைந்தார். இதனால் கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், முதன்மைக் காவலர்களான ஜெயசேகரன், மணிவண்ணன், முதல்நிலைக் காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
வலிப்பு இல்லை..ராஜசேகரை கொடுங்கையூர் போலீசார் அடித்தே கொன்று விட்டனர்..குற்றம் சாட்டும் தாயார்
ஓராண்டில் காவல் மரணங்கள்
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று பின், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மட்டும் திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி, தஞ்சாவூரைச் சேர்ந்த சத்தியவான், சேலத்தைச் சேர்ந்த பிரபாகரன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், சென்னையைச் சேர்ந்த விக்னேஷ், கொடுங்கையூரைச் சேர்ந்த ராஜசேகரன் ஆகியோர் லாக் அப்பில் மரணமடைந்துள்ளனர்.
அண்ணாமலை ட்வீட்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை முதல் அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை விதைத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில், இரண்டு லாக்கப் மரணங்கள் செய்யப்பட்டுள்ளது. நேற்று ராஜசேகர் உயிரிழந்த நிலையில், இன்று சிவசுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
அரசு இயங்குகிறதா?
கடந்த ஓராண்டில் மட்டும் 7 லாக்கப் மரணங்கள் நடைபெற்றுள்ளது. காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை குறித்தும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
மனித உரிமை ஆணையம்
இதனிடையே விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. வழக்கை விசாரணைக்கு எடுத்த ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன், விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.