EXCLUSIVE: எனக்கும் இபிஎஸ்க்கும் மோதலா? எம்ஜிஆர் அஞ்சலிக்கு தனியே வந்தது ஏன்? சிவி சண்முகம் விளக்கம்
சென்னை : எம்ஜிஆர் நினைவிடத்தில் சி.வி. சண்முகம் தனியாக வந்து அஞ்சலி செலுத்தியது சர்ச்சையான நிலையில் அது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தான் தனி அணியாக செயல்படுகிறேனா என்பதற்கும் அவர் பதிலளித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன குறிப்பாக அமித் ஷாவை நேரில் சந்தித்த பிறகு அவருக்கு சாதகமான அம்சங்கள் அரசியலில் நிகழத் தொடங்கி இருக்கிறது.
டெல்லி தலைமையின் ஆதரவு இருப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் எப்படியாவது அதிமுகவில் மீண்டும் இணைந்து விட வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார்.

அதிமுக - பாஜக
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றி விட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதனால் பாஜக தலைமை கடும் அதிருப்தி அடைந்த நிலையில் அதற்கடுத்து தொடர்ந்து அஸ்திரங்களை தொடுக்க ஆரம்பித்தனர் இபிஎஸ் ஆதரவு முன்னாள் அமைச்சர்கள். செங்கோட்டையன் தொடங்கி ஜெயக்குமார் சிவி சண்முகம் கேபி முனுசாமி என பலரும் வெளிப்படையாகவே பாஜகவை விமர்சித்து வந்தனர். குறிப்பாக மாநிலங்களவை உறுப்பினரான சிவி சண்முகம் கடலூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு அதனை வெளிக்காட்டும் வகையில் இருந்தது.

எடப்பாடி பழனிசாமி
குறிப்பாக ஆரம்பத்தின் இருந்தே பாஜக தலைமையை முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆதரவாளருமான கடுமையாக விமர்சித்து வந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் அதிமுக தோற்றது என பேசியது அப்போதே பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது வரை பாஜகவை வெளிப்படையாகவே விமர்சிக்கும் தலைவர்களில் ஒருவராக சிவி சண்முகம். இந்நிலையில் இபிஎஸ் சிவி சண்முகம் இடையே திடீர் மோதல் ஏற்பட்டதாக யூகங்கள் கிளம்பியுள்ளது

சிவி சண்முகம்
இன்று மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனமான எம்ஜிஆரின் 35 வது நினைவு தினத்தை ஒட்டி எடப்பாடி தலைமையிலான அதிமுகவினர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தி, உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அவர்களுடன் வந்து மரியாதை செலுத்தாமல் அவர்கள் வந்து சென்ற பிறகு தனியாக வந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரச்சினையா?
இதனால் சி.வி. சண்முகத்திற்கும், எடப்பாடி அணிக்கும் ஏதேனும் பிணக்கு ஏற்பட்டுள்ளதோ என பரபரப்பு தொற்றிக் கொண்டது.. பல்வேறு விதமான கருத்துக்களும் பரவ தொடங்கியது. சி.வி. சண்முகம் தனி அணியாக செயல்படுகிறாரோ என்ற கருத்துக்கள் பரவிய நிலையில் அது தொடர்பாக அவரிடமே தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது. அது முற்றிலும் தவறானது சண்முகம் மறுத்துள்ளார்.

தனி அணியாகவா?
காலையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த போது டிராபிக்கில் மாட்டிக் கொண்டதாகவும் அதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அஞ்சலி செலுத்துவதற்கு வந்து சேர முடியவில்லை என்றும் ஆனால் அதன் பிறகு நடைப்பெற்ற எடப்பாடி தலைமையிலான உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் தானும் கலந்து கொண்டதாகவும் அதற்கான வீடியோ ஆதாரங்கள் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். எனவே உறுதிமொழி ஏற்று அதன் பிறகு தான் மட்டும் தனியாக சென்று எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். தான் தனி அணியாக செயல்படுவது திட்டமிட்ட வதந்தி என மறுப்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications