ஸ்டாலினுக்கு தலைவலியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறாரா கமலஹாசன்?
- ஆர். மணி
சென்னை: அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்ட சபை தேர்தலில் திமுக வுக்கும் குறிப்பாக அதன் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் தலைவலியாக ஒருவர் உருவாகிக் கொண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அவர் வேறு யாருமல்ல, திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன்தான்.
கடந்த ஓராண்டாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களை உன்னிப்பாக பார்த்தால் இது நன்றாகவே புரியும். கடந்தாண்டு இறுதியில் நாட்டில் பெரும் புயலை கிளப்பிய தேசீய குடியுரிமை சட்ட திருத்தம் (Citizenship Amendment Act or CAA) தொடர்பான போராட்டங்களில் கமலின் மநீம முன்னணியில் நின்றது.
CAA வை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் முதன் முதலில் வழக்கு போட்டது மநீம தான். கமலஹாசன் கட்சியின் சார்பில் தான் முதல் வழக்கு போடப்பட்டது. அதன் பிறகுதான் சுமார் 60 க்கும் மேற்பட்ட மனுக்கள் CAA வுக்கு எதிராக போடப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது. இந்த காலகட்டத்தில் CAA வுக்கு எதிராக திமுக வும் அதன் தோழமை கட்சிகளும் தமிழகம் முழுவதும் மிகப் பெரிய ஆர்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
சவால்களை சமாளிக்க அம்மா கற்றுக்கொடுத்தார்... கேரள முதல்வர் பினராயி விஜயன் நெகிழ்ச்சி
ஜகா வாங்கிய கமல்
இதில் முதலில் கலந்து கொள்ளுவதாக அறிவித்த மநீம பிறகு பின் வாங்கியது. "கமலஹாசனுக்கு அறுவை சிகிச்சை நடந்திருப்பதால் அவரால் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள முடியாது" என்று மநீம கட்சியை சேர்ந்த முரளி அப்பாஸ் அறிவித்தார். கமல் கலந்து கொள்ளாவிட்டால் என்ன, மநீம கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாம் அல்லவா? ஆனால் யாருமே, அதாவது மநீம கட்சியே திமுக நடத்திய போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை.
டாஸ்மாக் விவகாரம்
இரண்டாவது முக்கிய நிகழ்வு, இந்த லாக்டவுன் காலத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பது என்று மாநில அரசு முடிவு செய்த பிறகு அதனை எதிர்த்து மநீம மேற்கொண்ட நடவடிக்கைகள். டாஸ்மாக் திறப்பை எதிர்த்து பல மனுக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டன. இவற்றை மொத்தமாக விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் வரும் மே 17ம் தேதி, அதாவது லாக்டவுன் காலம் முடியும் வரையில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடை விதித்தது. இது மநீம வுக்கு கிடைத்த பெரிய வெற்றியாகவே பார்க்கப் படுகிறது.
கமல் மனுவுக்கு எதிர்பார்ப்பு
டாஸ்மாக் திறப்பை எதிர்த்து பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டாலும், அதில் ஒரு மனு மீது தீர்ப்பு கூறப்பட்டாலும் கூட, நாடறிந்த ஒரு சினிமா நடிகர் அவரது அரசியல் கட்சி தாக்கல் செய்த மனுவுக்கு கிடைத்த வெற்றியாக, கமலஹாசனால் இதனை சித்தரித்துக் காட்டிக் கொள்ள முடிந்தது. இன்னொரு காரியத்தையும் மநீம செய்தது. உயர்நீதி மன்றத்தின் டாஸ்மாக் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதி மன்றத்துக்கு சென்றுள்ளது. வரும் 14 ம் தேதி இதில் விசாரனை நடக்கவிருக்கிறது. உடனே இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாத த்தை கேட்காமல் எந்த தீர்ப்பும் வழங்க கூடாதென்று கூறும் கேவியட் மனுவையும் உச்சநீதிமன்றத்தில் கமலஹாசனின் மநீம தாக்கல் செய்து விட்டது.
முதல் குரல் கொடுத்த கமல்
நாம் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான்.... அதாவது டாஸ்மாக் கடைகளை திறப்பதை எதிர்த்து திமுகவும் அதனது தோழமை கட்சிகளும் மட்டுமின்றி பாமக வும் கடுமையாக குரல் கொடுத்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவர்களில் ஒருவர் கூட - குறிப்பாக திமுக மற்றும் பாமக - உயர்நீதிமன்றத்துக்குப் போகவில்லை. போனது மநீம மட்டும் தான். இப்போது சுப்ரீம் கோர்ட்டில் பாமகவும் கேவியட் போட்டுள்ளது. கமலஹாசனின் இந்த நடவடிக்கைகள் திமுக வுக்கு குறிப்பாக அதனது தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஒருவிதமான எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவே திமுக தலைவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
உரிமை கொண்டாடிய கமல்
கிராம சபை கூட்டம் என்று பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டத்தை கமலஹாசன் வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் நடத்தினார். இதில் சுமார் 70 க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு திமுக தலைவர் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று கிராம சபை கூட்டங்களை நடத்தினர். இது காலங் காலமாய் திமுக செய்யும் காரியம். கருணாநிதி உயிருடன் இருக்கும் போதும் இது நடந்திருக்கிறது. ஸ்டாலின் பல ஆண்டுகளாக இதனை செய்து வருகிறார். ஆனால் 2019 ம் ஆண்டு இதனை கமலஹாசன் செய்த பிறகு ஸ்டாலின் செய்ததும், அதற்கு கமலஹாசன் சொந்தம் கொண்டாடியதும் திமுக வினரை எரிச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறது. கமலஹாசன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திமுக வை நன்றாகவே சீண்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் திமுகவோ கமலை நன்றான மன நிலையில் அதாவது ஆங்கிலத்தில் சொன்னால் "in good books" வைத்துக் கொள்ளவே விரும்புகிறது என்றே சொல்ல வேண்டும்.
சிலை திறப்பு விழா
கருணாநிதி சிலை திறப்பு விழா, முரசொலி 75 ம் ஆண்டு விழா உள்ளிட்ட விழாக்களுக்கு கமலஹாசனுக்கு அழைப்புகள் அனுப்பபட்டது. கமலஹாசனும் இதில் கலந்த கொண்டார். "நாங்கள் கமலை நன்றாகவே நடத்துகிறோம். அவரை நாங்கள் சீண்டுவதில்லை. ஆனால் கமல் பல நேரங்களில் திமுக வையும், ஸ்டாலினையும் சீண்டிக் கொண்டிருக்கிறார். நாங்கள் எவ்வளவோ இறங்கிப் போன பிறகும் கமல் அடங்க மறுக்கிறார். நாங்கள் இன்னமும் பொறுமையாகவே இருக்கிறோம்" என்று இந்த கட்டுரையாளரிடம் கூறினார் திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர். 2019 ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கமலஹாசனின் மநீம தமிழகம் மற்றும் புதுவையின் அனைத்து 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு 3.72 சதவிகித வாக்குகளை பெற்றது. அத்தனை தொகுதிகளிலும் டெபாசிட் தொகையை பறி கொடுத்தது. ஆனால் ஒரு புதிய கட்சி 3.72 சதவிகித வாக்குகளை பெறுவது என்பது பெரிய விஷயம் தான். இங்குதான் திமுக வுக்கு சிக்கல் வருகிறது. 2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அஇஅதிமுக வுக்கும் தோற்ற திமுக வுக்கும் இடையிலான வாக்கு சதவிகிதம் வெறும் 1.5 சதவிகிதம் தான்.
தலைவலியாகிறாரா
ஆளும் அஇஅதிமுக வுக்கு எதிராக நாளுக்கு நாள் அதிருப்தி பெருகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் எடப்பாடி அரசுக்கு எதிரான வாக்குகள் சிதறுவது, அது சொற்ப சிதறலாக இருந்தாலும், நஷ்டத்தை ஏற்படுத்தப் போவது திமுக வுக்குத்தான் ... 1972 ல் சினிமா நடிகராக இருந்த எம்ஜிஆர் திமுக வை விட்டு வெளியேறி அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்த பிறகு என்னவெல்லாம் நடந்தது, 1977 ல் ஆட்சியை கைப்பற்றிய எம்ஜிஆர் தான் உயிருடன் இருந்த வரை, 1987 வரையில் திமுக வை ஆட்சிக் கட்டிலின் அருகிலேயே வரவிடவில்லை என்பதெல்லாம் திமுக வுக்கும், ஸ்டாலினுக்கும் நன்றாகவே தெரியும்தான். அது கமலோ, ரஜினியோ சினிமாகாரர்களை சீண்டாமல் இருக்கவே கருணாநிதியும் விரும்பினார் ... ஸ்டாலினும் விரும்புகிறார் ...... இப்போது புரிகிறதா கமலஹாசன் எப்படி ஸ்டாலினுக்கு தலைவலியாக மாறிக் கொண்டிருக்கிறார் என்பது......?