ஓபிஎஸ் பதவிக்கு பிரச்சனை இல்ல.. கவனிச்சீங்களா? 127 பக்க தீர்ப்பில் முக்கிய விஷயம்.. ‘பிரதான வழக்கு’!
சென்னை : சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள 127 பக்க தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, ஓ.பன்னீர்செல்வத்தின் 'ஒருங்கிணைப்பாளர்' பதவிக்கு சிக்கல் இல்லை என சட்ட வல்லுநர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, இன்று பொதுக்குழு முறையாக கூட்டப்படவில்லை எனத் தொடரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் மேல்முறையீடு செய்த வழக்கில் தான் பொதுக்குழு செல்லும் எனத் தீர்ப்பு வந்துள்ளது.
அதேநேரம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என்பது குறித்து பிரதான சிவில் வழக்கில் தான் முடிவெடுக்க முடியும் என்பது தீர்ப்பின் முக்கிய அம்சமாகும்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என்பது குறித்த பிரதான வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் தான் இருக்கிறது. இதனால், ஓபிஎஸ் தரப்பின் கதவுகள் இன்னும் மூடப்படவில்லை.
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து: 2 நீதிபதி பெஞ்ச் உத்தரவு
பரபரப்பு தீர்ப்பு
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தும், பொதுக்குழுவை நடத்தியது செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் உள்ள பொதுக்குழுவுக்குதான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
127 பக்க தீர்ப்பு விவரம்
இன்று ஐகோர்ட் அளித்த 127 பக்க தீர்ப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதில், எதன் அடிப்படையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்பதற்கான காரணங்கள் நீதிபதிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளன. பொதுக்குழுவுக்கு தலைமை நிலைய செயலாளர் அறிவிப்பு வெளியிட்டதில் தவறில்லை. ஈபிஎஸ். - ஓபிஎஸ் இடையே மோதல் நிலவுவதால், ஜூன் 23ல் அவைத்தலைவர் அழைப்பு விடுத்த ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதம் என கூற முடியாது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவே நோட்டீஸ் தான்
மேலும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ல் நடக்கும் என ஜூன் 23ல் பொதுக்குழுவில் அறிவித்ததே நோட்டீஸ் தான். அதனை முறையான நோட்டீஸாகத்தான் கருத வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நடத்தப்படும் சிறப்பு கூட்டங்களுக்கு இன்னொரு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோதுதான் ஜூலை 11 பொதுக்குழு கூட்டப்படும் அறிவிக்கப்பட்டால், தனக்கு தெரியாது என அவர் கூற முடியாது எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலாவதி ஆனதா? - நோ
அதேநேரம், மேலும் சில விஷயங்களும் தீர்ப்பில் பாயிண்ட் செய்யப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு ஜூன் 23ல் கூட்டப்பட்ட பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இரு பதவிகளும் காலியாகிவிட்டதா என்பதை பிரதான வழக்கில் தான் முடிவு செய்ய முடியும். அதுகுறித்து இப்போது எந்த கருத்தும் கூற முடியாது. அவற்றை பிரதான வழக்கின் இறுதி விசாரணையில்தான் முடிவு செய்ய முடியும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதான சிவில் வழக்கு
நீதிபதி அமர்வு தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள, பிரதான உரிமையியல் வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்னும் விசாரணையில் உள்ளது. அதாவது, பொதுக்குழு முறையாகக் கூட்டப்படவில்லை, 15 நாளுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பவில்லை என்பதால் பொதுக்குழு செல்லாது என தொடரப்பட்ட வழக்கில் ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவுதான் இப்போது நீதிமன்ற அமர்வால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடைசி அல்ல
அதேநேரம், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருக்கிறதா? காலாவதியாகிவிட்டதா? அந்தப் பதவிகளை பொதுக்குழு அங்கீகரித்தால் தான் பதவி நீடிக்குமா? என்பது தொடர்பாக பிரதான வழக்கில் தான் விசாரிக்கப்படும். எனவே, இந்தத் தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக எல்லாமே அமைந்து விட்டதாகக் கருத முடியாது என்கிறார்கள சட்ட வல்லுநர்கள்.