அங்கேயும் ஒரு சிக்கல்.. காரணம் ஆதரவாளர்கள்.. 'கேம் சேஞ்ச்' - இடத்தை மாற்றும் ஓபிஎஸ்.. என்ன நடந்தது?
சென்னை : ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் தனக்கென ஒரு அலுவலக இடத்தை பார்க்குமாறு ஆதரவாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு, தனியார் ஹோட்டல் சொன்ன விஷயம் தான் காரணமாம்.
அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதால், தனது ஆதரவாளர்களுடன் தனியார் ஹோட்டலில் தான் ஆலோசனை நடத்தி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிகளவில் வருவதால், இடையூறு ஏற்படுவதாக அந்த ஹோட்டல் நிர்வாகம், ஓ.பன்னீர்செல்வத்திடம் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஓ.பன்னீர்செல்வம், ஆலோசனைக் கூட்டம் நடத்த வேறு இடம் பார்த்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக அலுவலகத்தின் சாவியை வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, அங்கு சென்றால், மீண்டும் நீதிமன்றத்தை நாடவும் ஓபிஎஸ் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
மாயத்தேவருக்கு மரியாதை! கிளம்பிய சசிகலா.. பயணத்தில் பன்னீர்செல்வம்! 'அவர்’ வருவாரா என எதிர்பார்ப்பு!
குறி தப்பாது.. ரெண்டே வாரம்.. 'பாசிட்டிவ் ரிசல்ட்’ - நடத்திக்காட்டிய புள்ளிகள்.. ஓபிஎஸ் ஒரே குஷி!
அதிமுக தலைமை அலுவலகம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து வருவாய்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இது தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அத்துடன் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு மாத காலத்திற்கு அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
ஈபிஎஸ் கையில் சாவி
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடை கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதற்கிடையே அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கும் உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. தற்போது, அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பதால் அவர் கட்சி தொண்டர்களுடன் தலைமை அலுவலத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் செல்லவில்லை.
ஆலோசனை எங்கு?
எடப்பாடி பழனிசாமி சென்னையில் தனது கிரீன்வேஸ் சாலை வீட்டிலேயே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களைச் சந்திக்க தனியாக ஒரு அலுவலகத்தை சென்னையில் பார்த்து வந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த முயற்சியைக் கைவிட்டு, தற்போது மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தான் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
கூட்டம் அதிகம்
இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த ஹோட்டலில் ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம் நடத்தியபோது 500க்கும் மேற்பட்டோர் வந்து கொண்டே இருந்தனர். பின்னர், ஒரு வாரம் சொந்த ஊருக்குச் சென்ற ஓபிஎஸ், அங்கு தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களைச் சந்தித்து வந்தார். நேற்று மீண்டும் சென்னை திரும்பிய ஓபிஎஸ், அதே மயிலாப்பூர் தனியார் ஹோட்டலில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போதும், 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.
சுட்டிக்காட்டிய ஹோட்டல் நிர்வாகம்
ஓபிஎஸ் அந்த ஹோட்டலுக்கு வரும் போதெல்லாம், அதிமுகவினர் அதிகளவில் திரள்வதால், அப்பகுதியில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக, ஹோட்டல் தரப்பிலிருந்து ஓபிஸ்ஸிடம் தெரிவித்துள்ளனர். நாள்தோறும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் ஹோட்டல் நிர்வாகத்தினர் பன்னீர்செல்வத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வேறு இடம் பார்க்கும் ஓபிஎஸ்
இதையடுத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்காக சென்னையில் வேறு இடத்தைப் பார்க்குமாறு ஓபிஎஸ், தனக்கு நெருக்கமானவர்களிடம் அறிவுறுத்தியுள்ளாராம். ஏற்கனவே, மந்தைவெளியில் 14 அறைகள் கொண்ட ஒரு அலுவலகத்தைப் பார்த்து ஓகே செய்திருந்தார் ஓபிஎஸ். ஆனால், அதிமுக அலுவலகத்தையே மீண்டும் கைப்பற்றி விடலாம் என்ற கணக்கில் அந்த இடத்தை ஃபிக்ஸ் செய்யவில்லை.
தோதான இடம்
இந்நிலையில், தனியார் ஹோட்டலில் கூட்டம் அதிகரிப்பது குறித்து அவரிடம் சொல்லப்பட்டுள்ளதால், மந்தைவெளியில் உள்ள அந்த இடத்திற்கே போகலாமா, அல்லது சென்னையில், தோதான வேறு இடம் பார்க்கலாமா என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறாராம். விரைவில், வேறு இடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படலாம் என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.