இங்க பாருங்க கொடுமைய.. 2வது டோஸுக்கு தத்தளிக்கும் தமிழகம்.. 'அந்த' தவறு தான் காரணமா?
சென்னை: 'என்னது! தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையா?' என்று கேட்போரை அதிர வைக்கிறது இந்த செய்தி.
Recommended Video
மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான ரெஜிஸ்டர் நாளை (ஏப்.24) முதல் கோவின் தளத்தில் தொடங்குகிறது.
ம.பி.யில் மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்... கொரோனாவை விரட்ட தீப்பந்தம் ஏந்திய கிராம மக்கள்..!
இந்த நிலையில், தமிழகத்தில் ஆக்சிஜன், வெண்டிலேட்டர், கொரோனா சிகிச்சை மருந்து ஆகியவை பற்றாக்குறை நிலையில் இல்லை என தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
கடும் பற்றாக்குறை
இது ஓருபுறமிருக்க சென்னையில் பல சீனியர் சிட்டிசன்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் பல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இரண்டாவது டோஸ் பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது. கிராமப்புறங்களில், முதல் டோஸ் கூட தினசரி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது; சென்னையில், பலருக்கும் இரண்டாவது டோஸ் கிடைக்கவில்லை.
அலைமோதிய மக்கள்
தனது இரண்டாவது டோஸுக்கு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்ற ஒருவருக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது. அவர் மார்ச் 10 அன்று தனது முதல் டோஸை எடுத்துக் கொண்டார். அப்போது, அங்கு மீதமிருந்தோருக்கு தடுப்பூசி வரும் வரை அவர்கள் தற்காலிக கூடாரத்தில் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். பிறகு, அங்கு இரண்டாவது டோஸ் மட்டுமே வழங்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர். சில மணி நேரத்திற்கு பிறகு தடுப்பூசி வந்தவுடன் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியிருக்கிறது.
20க்கு 3 போதுமா?
அதேபோல் தஞ்சை பகுதியில், கொரோனா இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொள்ளச் சென்ற நபர் ஒருவருக்கு, பத்து நாள் கழித்து வருமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்று பல்வேறு இடங்களில், கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் பற்றாக்குறை புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளில் தான் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது. ஒரு மருத்துவமனை 20 டோஸ் கோரினால், மூன்று டோஸ் மட்டுமே வழங்கப்பட்டது. தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கும்போது, நிலைமை எளிதாகும்" என்றனர்.
ஒன்னும் வர்றதில்லை
இதுகுறித்து தனியார் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் கூறுகையில், "10 நாட்களுக்கும் மேலாக மருந்தின் இருப்பு குறைவாக உள்ளது. கோவாக்சின் ஒரு வாரத்திற்கும் மேலாக வழங்கப்படவில்லை என்றாலும், சில நாட்களுக்கு முன்பு வந்த கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது" என்றனர்.
அதுதான் காரணமா?
கொரோனா வைரஸ் தடுப்பூசியை அதிகம் வீணடித்த மாநிலம் தமிழகம் தான் என்பது சமீபத்தில் ஆர்டிஐ மூலம் தெரிய வந்தது. ஒருவேளை தமிழகத்தின் இந்த மோசமான செயல்பாடே 2வது டோஸ் தட்டுப்பாட்டிற்கு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில், மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசியை பகிர்ந்து அளிப்பதில் மத்திய அரசு சில அளவுகோலை உருவாக்கியுள்ளது. அதில், கொரோனா மருந்தை எந்த மாநிலம் அதிகம் வீணடிக்கிறது என்பது கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி வீணடிக்கும் மாநிலங்களுக்கு மருந்துகள் எண்ணிக்கை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும், இதில் நாம் நிம்மதி அடையும் விஷயம் என்னவெனில், தமிழகத்தில் ஆக்சிஜன், ரெமிடிசிவிர் பற்றாக்குறை இல்லை என்பது தான். கொரோனா தடுப்பூசி தாமதமானால் கூட பிரச்சனை இல்லை. ஆக்சிஜன் இல்லையென்றால்...? அந்த வகையில் நாம் அதிர்ஷ்டசாலிகள் தான்.