"பாஜக".. டிடிவி தினகரன் சொன்னதை கேட்டு "ஸ்டன்" ஆன நிர்வாகிகள்.. கொங்கிலிருந்து சீறி வந்த எதிர்ப்பு
சென்னை: அமமுக பொதுக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியது கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கியமாக அமமுகவிற்கு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் 6 தமிழர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தீர்மனம் நிறைவேற்றப்பட்டது.
இந்த பொதுக்குழுவில் சில சுவாரசியமான சம்பவங்களும் நடந்து உள்ளன.

எடப்பாடி மீது விமர்சனம்
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது டிடிவி தினகரன் சரமாரி விமர்சனங்களை வைத்தார். அவர் பேசுகையில், அதிமுக தற்போது நல்லவர்கள் கையில் இல்லை. அக்மார்க் சுயநலவாதி ஒருவரின் கையில்தான் அதிமுக சிக்கி தவிர்க்கிறது. இரட்டை இலை சின்னத்திற்காக மக்கள் அங்கே இருக்கிறார்கள். இல்லையென்றால் அங்கே யாரும் இருக்க மாட்டார்கள். அதிமுக பொதுக்குழுவில் நடந்த விஷயங்களை பார்த்து மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

ஜெயலலிதா
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை கூட விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு கட்சி சுயநலவாதி கையில் உள்ளது, ஜெயலலிதா நடத்திய அதிமுக இப்போது இல்லை. அவர்கள் அதிமுகவின் உண்மையான ஆட்சியை கொடுக்க முடியாது. ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை கொடுக்க முடியாது. அதை நம்மால் மட்டுமே கொடுக்க முடியும். அமமுகதான் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை கொடுக்கும், என்று கூறினார். இதில் தேசிய அளவிலான கூட்டணி குறித்தும் டிடிவி தினகரன் பேசியதாக கூறப்படுகிறது.

தேசிய கூட்டணி
பிரதமரை தேர்வு செய்வதில் அமமுக அடுத்த முறை பங்குபெற வேண்டும். காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகள் உள்ளன. இதில் பிரதமரை தேர்வு செய்யும் கட்சியில் நாம் இருக்க வேண்டும். அமமுக தனித்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் பலன் இல்லை. நாம் தேசிய கட்சியோடு சேர்ந்து செயல்படுவதே சரியாக இருக்கும். காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இரண்டில் ஒன்று நடக்கும் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சை
அவரின் இந்த பேச்சு பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் இப்போது வரை பாஜகவிற்கு சாதகமான சூழ்நிலையே காணப்படுகிறது. அப்படி இருக்கும் போது பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் இடம்பெறுவேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதனால் பாஜகவுடன் கூட்டணி வைப்பதை பற்றி டிடிவி தினகரன் பேசுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவுடன் நட்பாகி கூட்டணி வைக்க அவர் முயல்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எதிர்த்து
இந்த நிலையில்தான் அமமுகவின் கோவை வடக்கு மாவட்ட துணை செயலாளர் கோகுல் தற்போது டிடிவி தினகரனின் பேச்சை விமர்சனம் செய்துள்ளார். அதில், "திராவிடசெல்வர்" அண்ணன் டிடிவி தினகரன், இன்று நடந்த நமது கழகத்தின் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் 2021ல் பாஜக உடன் கூட்டணி பேசியதும், வரும் 2024ல் பாஜக உடன் கூட்டணி என்ற அறிவிப்பும்! "தன் வாழ்நாளில் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை" என அறிவித்ததோடு மட்டுமல்லாமல், அதை தன் வாழ்நாள் வரை கடைபித்த அம்மாவின் தொண்டர்களாகிய எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. 2017 ஏப்ரலில் நீங்கள் சிறை சென்ற நாள் முதல் இன்று வரை, பாஜக அரசை எதிர்த்தும், அதிமுக அடிமைகளை எதிர்த்தும், பலன்கள் பல துறந்தும், இன்னல் பல சந்தித்தும் இதற்காகவா உங்களுடன் நின்றோம்?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications