பிரதமர் மோடி சொல்லும் போது மத்திய நிதியமைச்சகம் சங்கடப்படுத்தலாமா? ப.சிதம்பரம் கிண்டல்
மாநிலங்களுக்கு அறிவுரை வழங்க பிரதமர் தேர்வு செய்த நாளில் மத்திய நிதியமைச்சகம் ஏன் அவரை சங்கடப்படுத்தியது என்பதை அறிவது சுவாரஸ்யமாக இருக்கும் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சென்னை: மாநிலங்களை விமர்சித்து பேசும் அன்றைய தினத்தில் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை குறித்து மத்திய நிதிஅமைச்சகம் அறிவித்து பிரதமர் மோடியை தர்மசங்கடப்படுத்த காரணம் என்ன என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த புதன்கிழமையன்று மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்துரையாடினார்.
அப்போது, தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஜிஎஸ்டி நிலுவைத்தொகை
மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலில் மாநிலங்களுக்கு கடந்த மார்ச் மாதம் வரை 8 மாதங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. போதுமான நிதி இல்லாததால், இன்னும் ரூ.78,704 கோடி ஜிஎஸ்டி செஸ் நிதி மாநிலங்களுக்கு வழங்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தது.

மோடி பேச்சு
பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் பேசுகையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காமல் சில மாநிலங்கள் உள்ளன என்று தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
பெட்ரோல் டீசல் மீதான வரிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உற்பத்தி வரியைக் குறைத்தது. மத்திய அரசு வரிக்குறைப்பு செய்தது போன்று மாநில அரசுகளும் வாட் வரியைக் குறைக்க வலியுறுத்தினோம். சில மாநிலங்கள் வரியைக் குறைத்து ,அதன் பலனை நுகர்வோர்களுக்கு வழங்கின. பல மாநிலங்கள் வரியைக் குறைக்கவில்லை.

மக்கள் பாதிப்பு
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் அறிவுரைகளை பின்பற்றவில்லை. பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியையும் குறைக்கவில்லை. இந்த மாநிலங்களில் வாழும் மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வாலும்,விலைவாசி உயர்வாலும் பாதிக்கப்படுகிறார்கள் எனத் தெரிவித்தார்.

ப.சிதம்பரம் ட்வீட்
பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்குமாறு மாநிலங்களுக்கு பிரதமர் அறிவுறுத்திய நாளில், மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.78,704 கோடி பாக்கி வைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது. செலுத்த வேண்டிய தொகை உண்மையில் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது.

பாக்கித் தொகை
உண்மையில் அதிகமான நிதி தருவதற்கு மத்திய அரசு கடன்பட்டுள்ளது. நீங்கள் கூடுதலாக தொகையைச் சேர்த்தால், மாநிலங்களுக்கும் அதிகமாகத் தரவேண்டியதிருக்கும், ஒட்டுமொத்த கூட்டுத்தொகை பெரிதாகக்கூட இருக்கலாம். மத்திய அரசின் தலைமை கணக்குத் தணிக்கையாளருக்கு மட்டுமே சரியானத் தொகை தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார் ப.சிதம்பரம்.

மோடிக்கு தர்மசங்கடம்
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மாநிலங்களை விமர்சிக்க பிரதமர் மோடி தேர்ந்தெடுத்த நாளில் ஏன் நிதிஅமைச்சகம் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வெளியி்ட்டு தர்மசங்கடப்படுத்தியது ஏன் என்பதுதான் எனத் தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications