பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் கைது! சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு போக்கு -மமக
சென்னை: மத்திய அரசின் சிறுபான்மை வெறுப்புணர்வின் பிரதிபலிப்பாகவே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் கைதும் ரெய்டும் நடந்திருப்பதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்புப் போக்கை கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையின் விவரம் வருமாறு;
நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்க துறை ஒன்றிய அரசின் காவல் படைகள் புடைசூழ நடத்திய சோதனைகளும் செய்துள்ள கைதுகளும் வன்மையான கண்டனத்திற்குரியவை. ஒன்றிய அரசின் சிறுபான்மை வெறுப்புணர்வின் பிரதிபலிப்பாகவே இந்த தீய நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
பின்னிரவில் செய்யப்பட்டுள்ள இந்த அத்துமீறிய செயலை எவ்வகையிலும் நியாயாப்படுத்த முடியாது. குறிப்பாக மதுரையில் ஒரு பெண் நிர்வாகியின் இல்லத்திற்கு சென்று அத்துமீறலில் ஈடுபட்ட ஒன்றிய அரசின் ஏவலாளிகளின் நடவடிக்கைகள் உச்ச பட்ச மனித உரிமை மீறலாகும்.
பிஎஃப்ஐ அலுவலக ரெய்டு..சென்னையில் என்ஐஏ அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஒன்றிய அரசு என்ஐஏ போன்ற தன்னாட்சி அமைப்புகளை தனது அரசியல் லாபத்திற்காகவும் பழிவாங்குவதற்காகவும் பயன்படுத்தி வருவதன் மற்றொரு எடுத்துகாட்டாக இன்றைய சோதனைகள் அமைந்துள்ளன.
மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் என்ஐஏ கலைக்கப்பட வேண்டியதின் அவசியத்தை இன்றைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன. ஒன்றிய பா.ஜ.க அரசு சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்புப் போக்கை கைவிட்டு கைது செய்யப்பட்ட பி.எஃப்.ஐ நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.