செங்கோட்டையனை நீக்கியதும் நான் டெல்லிக்கு போய் அமித்ஷாவை சந்தித்தேன்! "ஜெயலலிதா மகள்" ஜெயலட்சுமி
சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கிய போது நான் அமித்ஷா ஜியை சந்தித்து நியாயம் கேட்டேன். அதற்கு அவர் என்னை ஒரு வாரம் பொறுத்திருக்குமாறு கூறினார், ஆனால் மீண்டும் அவர் என்னை அழைக்கவே இல்லை என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என கூறிக் கொள்ளும் ஜெயலட்சுமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில், செங்கோட்டையனை ஏன் அதிமுகவில் இருந்து நீக்கியது குறித்து நான் டெல்லி போய் அமித்ஷா ஜியை சந்தித்து பேசினேன். அப்போது அவரிடம் "என் அம்மா கட்சி இப்படி உடையுதே, எனக்கு கட்சியில் எந்த பதவியும் வேண்டாம்.

என் அம்மா ஜெயலலிதா உயிலில் என்ன எழுதியிருக்கிறாரோ அதை படித்து பார்த்து அதன் படி எனக்கு செய்ய வேண்டும் என கேட்டேன். அதற்கு அமித்ஷா, "ஒரு வாரம் பொறுங்கள் (You wait one week)" என சொன்னார். ஆனால் அமித்ஷா மறுபடியும் என்னை தொடர்பு கொள்ளவே இல்லை என ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னைக் கூறி, ஜெயலலிதாவைப் போன்ற தோற்றத்துடன் வலம் வரும் அம்ருதா என்கிற ஜெயலட்சுமி, அண்மையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) தலைமை அலுவலகத்திற்கு வந்தார். ஆண்டிபட்டி தொகுதிக்கான விருப்ப மனு நேர்காணலுக்கு வந்த அவரை, அங்கிருந்த தொண்டர்கள் வெளியேற்றினர். இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகள் களத்தில் இறங்க, அதிமுகவும் வேட்பாளர் தேர்வுக்கான விருப்ப மனுக்களைப் பெற்று நேர்காணல்களை நடத்தி வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிட, மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
இதில், எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் தொகுதிகளுக்கு மட்டும் 2,187 விருப்ப மனுக்கள் வந்தன. எடப்பாடி பழனிசாமி தலைமையில், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அடங்கிய குழு நேர்காணலை நடத்தியது. சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும், அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், திருவாரூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேர்காணல்கள் நடத்தப்பட்டன.
அதிமுக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அம்ருதா என்கிற ஜெயலட்சுமி தாம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "நான் அமித்ஷாவைச் சந்தித்து விட்டுத்தான் வந்தேன். நான் என்ன முதல்வர் பதவி கேட்கவா அதிமுக அலுவலகத்திற்கு சென்றேன்? எனக்கு ஏன் விருப்ப மனு கொடுத்தார்கள், நேர்காணலுக்கு வரச் சொல்லிவிட்டு ஏன் துரத்திவிட்டார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "நான் தான் அம்மாவின் உண்மையான வாரிசு. அதற்கான உயில் தேனியைச் சேர்ந்த ஒருவரிடம் உள்ளது. அந்த ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இவரது கருத்துகள் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளன.












Click it and Unblock the Notifications