சூடுபிடிக்கும் ஜெ.மரண வழக்கு: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர் குழு அமைப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை: முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள், நர்ஸ்கள் தவிர யாரும் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ராகுல்காந்தி, மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல்தலைவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து விட்டு சென்றனர்.
டிசம்பர் 5ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்தார். இதனையடுத்து நள்ளிரவில் ஓபிஎஸ் பதவியேற்றார். ஒரு மாத காலத்தில் ஓபிஎஸ் பதவி விலகினார். அவரையடுத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றார். இதனையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன. அவரது மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் தொடர்ந்து ஜெயலலிதாவுடன் தொடர்புடையவர்களை அழைத்து விசாரணை செய்து வந்ததது.

ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை
விசாரணை கமிஷன் தொடங்கப்பட்ட போது, 3 மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடபட்டிருந்தது. ஆனால் அடுத்தடுத்து ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்ததே தவிர, இன்னமும் விசாரணை கமிஷனின் விசாரணை முடிந்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள் என, 154 பேரிடம் ஆணையம் தீவிர விசாரணை நடத்தியது.

தடை வாங்கிய அப்பல்லோ
ஆறுமுகசாமி ஆணைத்தில் இறுதியாக, கடந்த 2019 ஜனவரி 22 ம் தேதி தம்பிதுரையிடம் விசாரணை நேரடியாக நடைபெற்றது. மருத்துவ குழு அமைத்து விசாரணையை நடத்தவேண்டும் என்பதை ஆணையம் ஏற்று கொள்ளாததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அப்பல்லோ, உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தது.
விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் சென்று அப்போலோ மருத்துவமனை தடை வாங்கியது.

மருத்துவக்குழு அமைக்க கடிதம்
இந்த வழக்கு விசாரணையில் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதால், 36 மாதங்களாக விசாரணை நடைபெறாமலேயே கால நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் பல்வேறு வாதங்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையை நிறைவு செய்ய உதவிக்காக மருத்துவக்குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆணையத்திற்கு உதவ உத்தரவு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட துறைகளில் இருந்து நிபுணர்களை பரிந்துரைக்கவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. ஆறுமுக சாமி ஆணையத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து காலநீட்டிப்பு செய்து வருகிறது. 12வது முறையாக கடந்த ஜனவரி 24ஆம் தேதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

எய்ம்ஸ் இயக்குனருக்கு கடிதம்
இந்நிலையில், ஆணையத்தின் விசாரணையின் போது உடன் இருக்க வேண்டும் என்பதால் மருத்துவர்களின் பெயர்களை விரைவில் பரிந்துரைக்குமாறு எய்ம்ஸ் இயக்குனருக்கு சில தினங்கள் முன்பாக ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. அதில் மருத்துவக் குழு அமைத்தால் மட்டுமே விசாரணையை தொடங்க முடியும் என்பதால் மருத்துவ வல்லுநர்களை விரைந்து பரிந்துரைக்கும்படியும் ஆறுமுகசாமி ஆணையம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு
அதன் தொடர்ச்சியாக எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான துறை ரீதியிலான வல்லுநர்கள் ஆவர். மருத்துவக்குழுவை அமைத்துள்ள நிலையில், ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மருத்துவர்களுடன் ஆறுமுகசாமி வரும் 16 ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலே உள்பட நான்கு பேருக்கு சம்மன் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications