டீச்சர்களை கழிவறையில் பூட்டி வைத்து.. அத்துமீறிய மாணவர்கள்.. கவுன்சிலிங் கொடுக்க உத்தரவு
சென்னை: திருவொற்றியூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் அடாவடி நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் வழங்கி பெற்றோரிடம் ஒப்படைக்க இளைஞர் சிறார் நீதிகுழுமம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களை தாக்குவது உள்ளிட்ட செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. கெத்து என்ற பெயரில் மாணவர்கள், பள்ளி வகுப்பறைகளில் செய்யும் நடவடிக்கைகள், அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
ஆசிரியர்களும் மாணவர்களின் உளவியலையும், பிரச்னைகளையும் அறியாமல் நடந்துகொள்கிறார்கள் என்ற விமர்சனமும் அதிகரித்துள்ளது. இதனால் ஆசிரியர்களின் மன ஓட்டத்தை மாணவர்களும், மாணவரின் மன ஓட்டத்தை ஆசிரியர்களும் புரிந்துகொண்டு வகுப்பறைகளில் செயல்பட வேண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள்.. மத்திய அமைச்சருடன் விரைவில் சந்திப்பு.. மா.சுப்பிரமணியன் திட்டம்!
திருவொற்றியூர் அரசுப் பள்ளி
சில நாட்களுக்கு முன் திருவொற்றியூரில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் நடந்த சம்பவம் மக்களிடையே பேசுபொருளாக மாறியது. இந்தப் பள்ளியில் கல்வி பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பள்ளியில் அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். பிற மாணவர்களை தாக்குவது, ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுப்பது, மாணவிகளை கிண்டல் செய்வது என ஒழுங்கீனமாக நடந்து வந்துள்ளனர்.
மாணவர்கள் மீது புகார்
இவர்கள் மீது பல ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். இதன்பேரில் தலைமை ஆசிரியர் அந்த மாணவர்களை அழைத்து பல முறை எச்சரிக்கை விடுத்திருக்கிறார். எனினும், அதனை கண்டுகொள்ளாத 3 மாணவர்கள் தொடர்ந்து பள்ளியில் அடாவடியான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
போலீசில் புகார்
இந்த நிலையில் மாணவர்களின் அடாவடி போக்கை தட்டிக்கேட்ட ஆசிரியர்களை 3 மாணவர்களும் கழிவறையில் பூட்டி வைத்துள்ளனர். இதை ஆசிரியர்கள் கண்டித்த போது மீண்டும் அவர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் இதுபற்றி போலீசில் புகார் அளிக்க முடிவு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மாணவர்கள் கைது
தொடர்ந்து காவல்துறையினர் தரப்பில் குழந்தை நல அலுவலருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. அவர் மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் மூன்று மாணவர்களையும் கைது செய்து காவல்துறையினர், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் பள்ளி வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
கவுன்சிலிங் கொடுக்க உத்தரவு
இதனைத்தொடர்ந்து மாணவர்கள் 3 பேரும், திருவள்ளூர் மாவட்ட இளைஞர் சிறார் நீதி குழுமம் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 3 மாணவர்களுக்கும் சரியான அறிவுரை வழங்கி முறையான கவுன்சிலிங் கொடுத்து தாய், தந்தையரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதி குழுமம் உத்தரவிட்டுள்ளது.