மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ஹர்ஷவர்தனை நீக்க வேண்டும் -தமிழக காங்கிரஸ்
சென்னை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ஹர்ஷவர்தனை நீக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனாவால் ஏற்படும் மனித இறப்புகளுக்கு யார் பொறுப்பு ஏற்பது ? என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது;
திட்டமிட்டபடி நாளை 18 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவது கேள்விக்குறி தான்.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ்
யார் பொறுப்பு
உலக நாடுகளில் கொரோனாவினால் இறந்தவர்களில் 4 பேரில் ஒருவர் இந்தியராக இருக்கிறார். இதன்மூலம் கொரோனா இறப்பில் உலக நாடுகளில் இந்தியா முதன்மை இடத்தை அடைந்திருக்கிறது. இதுவரை 1 கோடியே 88 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். இத்தகைய மனித இறப்புகளுக்கு யார் பொறுப்பு ஏற்பது ?
பொது ஊரடங்கு
கடந்த ஆண்டு பொது ஊரடங்கை அறிவித்த மறுநாள் மார்ச் 25 அன்று பிரதமர் மோடி பேசும் போது, 'மகாபாரத போர் 18 நாட்களில் முடிந்தது. ஆனால், கொரோனா ஒழிப்பு போர் 21 நாட்களில் முடிந்துவிடும்' என்று மிகுந்த நம்பிக்கையோடு பேசினார். கொரோனாவை ஒழிப்பதற்குக் குறைந்தபட்ச அறிவியல் பார்வை கூட இல்லாமல், முதலில் விளக்கை அணைக்கச் சொன்னார். பிறகு ஒளியை ஏற்றச் சொன்னார். அடுத்து கைதட்டி ஒலியை எழுப்பச் சொன்னார். அனைத்தையும் இந்திய மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு செய்தார்கள்.
வெற்றி காண்போம்
ஆனால், இதைச் செய்த 13 மாதங்களுக்குப் பிறகு கிடைத்த பலன்கள் என்னவென்று பார்க்கிற போது, மிகுந்த ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்து, வருமானத்தைத் துறந்து, எதிர்காலம் என்னவாகுமோ? என்ற கேள்விக்குறியுடன் வாழ்ந்து வருகிறார்கள். பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று கூறுகிற அளவிற்கு நாட்டின் நிலைமையை அறியாதவர்கள் அல்ல.
பதவி நீக்கம்
ஆனால், நாடு கொரோனா பாதிப்பினால் எதிர்கொண்டிருக்கிற அனைத்து அவலங்களுக்கும் பொறுப்பேற்று, குறைந்தபட்சம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனை உடனடியாக பதவியிலிருந்து விலக்கி வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். கொரோனாவை எதிர்கொள்வதில் மத்திய அரசு குழப்பத்திற்கு மேல் குழப்பம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு எப்போது விடிவு ஏற்படப் போகிறது?