ஆர்எஸ்எஸ் ஆபீசா அது? ‘அரசியல் பேசுனாங்களாம்’ - அடுத்த கட்டத்துக்கு தயாராகுங்க.. கி.வீரமணி மெசேஜ்!
சென்னை: ரஜினிகாந்த், ஆளுநர் உடன் அரசியல் பேசியதாகக் கூறியிருப்பது ஆளுநர் மீதான அரசியல் தலைவர்களின் குற்றச்சாட்டுக்கு தக்க ஆதாரமாக அமைந்துள்ளது என்று திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து பேசினார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடந்த இந்தச் சந்திப்பின்போது பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பின்போது அரசியல் குறித்தும் பேசியதாக ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மோடிக்கு ரஜினிகாந்த் கொடுத்த “ஐடியா”.. இன்று நாடே இது பத்திதான் பேசுது! டெல்லி சென்றது இதற்காகவா?
ரஜினிகாந்த் - ஆளுநர் சந்திப்பு
தமிழக ஆளுநர் உடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது. காஷ்மீரில் பிறந்து வட மாநிலங்களிலேயே இருந்த ஆளுநர், தமிழ்நாட்டை மிகவும் நேசிக்கிறார். தமிழர்களின் ஆன்மிக உணர்வு அவரை ஈர்த்துள்ளது. தமிழகத்தின் நன்மைக்காக எதை செய்யவும் தயாராக உள்ளேன் என ஆளுநர் கூறினார் எனத் தெரிவித்தார். மேலும், ஆளுநருடனான சந்திப்பின்போது அரசியல் குறித்து பேசியதாகவும் அதனை வெளியில் கூற முடியாது எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ஆளுநர் மாளிகையில் அரசியல்
ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநரைச் சந்தித்து அரசியல் பேசியதாக ரஜினிகாந்த் கூறியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. அரசியலுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட வேண்டிய ஒரு மாநிலத்தின் ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படக் கூடாது. இது மாநில நலனுக்கு விரோதமானது என அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் கண்டனம் எழுந்து வருகிறது. இதற்கு தி.க தலைவர் கி.வீரமணியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போட்டி அரசாங்கம்
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் ஆளுநராக மத்திய அரசால் அனுப்பப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஓராண்டிலேயே இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர் என்ற புகழ்பெற்று வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு எதிராக, கடந்த பல மாதங்களாகவே - அதன் கொள்கைத் திட்டங்கள் - இவற்றிற்கு முற்றிலும் எதிர்மறையான கருத்தை நாளும் பரப்பி ஒரு போட்டி அரசாங்கத்தினையே நடத்தி வருகிறார்.
ஆர்எஸ்எஸ் தமிழகப் பிரிவின் தலைமை இடமா?
உச்ச நீதிமன்றத்தால் குட்டுப்பட்ட ஆளுநர், பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தில் குட்டுப்பட்டது போன்ற கருத்துரைகளுக்குப் பின்னரும்கூட, அந்தப் போக்கை கைவிடவில்லை. ராஜ் பவன் அலுவலகத்தை ஆர்எஸ்எஸ் தமிழகப் பிரிவின் தலைமை இடம் போலவே கருதி, தொடர்ந்து அறிக்கை விடுவது, சனாதனத்தின் பெருமைகள் பற்றிப் பேசுவது, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களைக் கிடப்பில் போட்டு, தனது அரசமைப்புச் சட்டக் கடமைகளை சரிவர நிறைவேற்றாதது உள்பட பல வகையிலும் ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் செய்து வருகிறார்.
தேவையற்ற பேச்சுகள்
தேவையற்ற முரண்பாடான வகையில் தமிழக மக்கள் வரிப் பணத்தில், வசதிகளுடன் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார் கொள்கை பிரச்சாரகராக நாளும் செயல்பட்டு வருகிறார் என்ற கண்டனங்கள் தமிழகத்தின் பல எதிர்க்கட்சித் தலைவர்களால் அவ்வப்போது கூறப்பட்டும், அதுபற்றி அலட்சியமே காட்டுகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அவரைச் சந்தித்து அரசியல் பேசினோம்; ஆனால், அதை வெளியிட முடியாது என்று கூறியுள்ளது, மற்ற தலைவர்கள் ஆளுநர் மீது சாட்டிய குற்றச்சாட்டுக்கு தக்க ஆதாரமாகவும் அமைந்துள்ளது.
அனைத்துக் கட்சிகளின் கடமை
தமிழகத்தின் அனைத்து கூட்டணி மற்றும் அரசியல் சட்ட மாண்புகளைக் காக்க விரும்புவோர், முற்போக்காளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து, அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்கவும் முன்வரவேண்டும்." என்று கி.வீரமணி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.