எந்த தாய்க்கும் இந்த சோகம் வரக் கூடாது.. கதறிய தனுஷின் தாய்.. நா தழுதழுக்க ஆறுதல் கூறிய கமல்ஹாசன்
சென்னை: நீட் தேர்வு அச்சத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் தனுஷின் பெற்றோருக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் போனில் ஆறுதல் தெரிவித்தார்.
நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்களின் கனவு நனவாகாமல் போவதாக இந்த தேர்வுக்கு எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பலரது எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டது.
இந்த தேர்வை ஏற்கெனவே இரு முறை எழுதிய சேலம் கோழையூர் விவசாயியின் மகன் தனுஷ், 3ஆவது முறை எழுதுவதற்காக ஆயத்தமாகி வந்தார். எனினும் இந்த தேர்விலும் தோல்வி அடைந்தால் நமது மருத்துவ கனவு கானல் நீராகிவிடுமே என்ற மன உளைச்சலில் இருந்துள்ளதாக தெரிகிறது.

நீட் தேர்வு
இதையடுத்து தேர்வு நாளன்று அதை எழுதுவதற்கு முன்பாகே தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இறந்த மாணவன் தனுஷின் உடலுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.

உதயநிதி ஆறுதல்
அது போல் திமுக சார்பில் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேரில் போய் இறந்த மாணவன் தனுஷின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ 10 லட்சத்திற்கான காசோலையையும் கொடுத்தார். மேலும் நீட் தேர்விலிருந்து விரைவில் விலக்கு பெற்றுவிடலாம், மாணவர்கள் மனம் தளராமல் இருங்கள் என முதல்வர் ஸ்டாலினும் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தார்.

மாணவன் தனுஷ்
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாணவன் தனுஷின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் அநீதியான நீட் தேர்வு ஏற்படுத்திய அச்சத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் தனுஷின் பெற்றோருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் 12.9.2021 அன்று தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.
Recommended Video

எந்த ஒரு தாய்க்கும்
"... இது இறுதி மரணமாக இருக்கட்டும். எந்த ஒரு தாய்க்கும் இந்த சோகம் வரக்கூடாது. எல்லோரும் சேர்ந்து இந்தத் தேர்வுக்கு ஒரு முடிவுகட்டுங்கள்" என்று தனுஷின் தாய் கதறியழுதபோது "... ஈடுசெய்ய முடியாத இழப்பிது. இழந்த நம் பிள்ளைக்கான ஒப்பாரியில் நானும் பங்கெடுக்கிறேன். நீட் தேர்வுக்கு எதிராக இன்னும் வலுவாகப் போராடி அடுத்த தலைமுறைப் பிள்ளைகளைக் காப்போம்" . என்று ஆறுதல் தெரிவித்தார்.

நிர்வாகிகள் பங்கேற்பு
மாணவர் தனுஷ் அவர்களின் உடலுக்கு மாநில செயலாளர் சரத்பாபு ஏழுமலை அவர்களும், மாவட்டச் செயலாளர் ஸ்ரீனிவாசன் அவர்களும் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் செல்வி அனுசுயா, திருமதி. அனிதா சசிகுமார், நகர செயலாளர் திரு. கண்ணன், சதீஸ்,ஜெகன், குமரேசன், முரளி, முருகன், ஈஸ்வரன், லக்ஷயா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செய்தனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications