நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்துக்குதானே கனிமொழி போனார்...அதுக்குள்ள கிளம்பிய 'அதிருப்தி' வதந்தி!
சென்னை: திமுக லோக்சபா எம்.பி. கனிமொழி டெல்லியில் நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்க சென்றார். ஆனால் அதிருப்தியில் இருப்பதாலேயே திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தை கனிமொழி புறக்கணித்துவிட்டதாக வதந்தி ஒன்றும் கிளப்பிவிடப்பட்டுவிட்டது.
நாடாளுமன்றத்தின் வேதியியல், உரங்கள் நிலைக்குழுவுக்கு தலைவராக இருக்கிறார் கனிமொழி. ஒவ்வொரு நாடாளுமன்ற நிலைக் குழுவும் கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக ஆய்வுகள் நடத்தின.
நிலைக்குழு கூட்டம்
இதனால் கனிமொழி தலைமையிலான வேதியியல், உரங்கள் நிலைக்குழுவும் ஆய்வு நடத்தியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக திமுக தலைமைக்கு தெரிவித்துவிட்டு டெல்லி சென்றார் கனிமொழி.
கிளம்பிய அதிருப்தி வதந்தி
இந்த பயணத்தால் சென்னையில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவில் கனிமொழி பங்கேற்கவில்லை. இருந்தபோதும் சிலர், கனிமொழி அதிருப்தியை காட்டும் வகையில்தான் டெல்லி சென்றார் என சில தகவல்களை முன்வைத்து வதந்தி கிளப்பிவிட்டனர். இது தொடர்பாக நாம் திமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.
தென்மண்டல பொறுப்பு
சில மூத்த திமுக நிர்வாகிகள் கூறுகையில், மு.க.அழகிரி தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தார். அந்த இடத்துக்கு கனிமொழி நியமிக்கப்படலாம் என ஒரு எதிர்பார்ப்பு இருந்தது உண்மை. அதேநேரத்தில் வடமாவட்ட மூத்த தலைவர் ஒருவர், அறிவிக்கப்படாத தென்மண்டல பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார். இது தென்மாவட்ட திமுகவிலேயே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
கனிமொழிக்கும் தலைமைக்கும் பிரச்சனை இல்லை
இந்த விவகாரங்களில் கனிமொழிக்கு எந்த தொடர்பும் இல்லை. இருந்தபோதும் கண், காது, மூக்கு வைத்து அப்படி இப்படி என சிலர் பரப்ப்பிவிட்டிருக்கின்றனர். கனிமொழியை பொறுத்தவரை தனக்கான பணி என்னவோ அதை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். தலைமைக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சிலர் நினைப்பது எல்லாம் நடந்துவிடாது என பட்டும்படாமலும் விவரித்தனர்.