நிறைய பணம் கிடைக்கும்.. குறுகிய காலத்தில் அதிக லாபம்.. கல்லூரி மாணவர்களை கஞ்சா விற்க வைத்த கும்பல்
சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை கஞ்சா விற்பனை செய்ய வைத்த கும்பலை போலீஸார் ஸ்கெட்ச் போட்டு பிடித்தனர்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவர்கள் 18 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் ஆந்திராவை சேர்ந்த நூதாக்கி ஐசக் மொத்தமாக கஞ்சாவை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் தமிழகத்தில் கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களை ஹரிபாபு என்பவர் கஞ்சா தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த 9 பேரை நேற்று முன் தினம் விருகம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.

கும்பல்
இந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்த கும்பலின் தலைவன் ஐசக்கை விஜயவாடாவில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவருடன் ஹரிபாபுவும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் கிடைத்தன. ஊரடங்கு காலத்தில் மது கிடைக்காமல் கஞ்சா போதைக்கு அடிமையான மாணவர்களை மூளை சலவை செய்தோம்.

நிறைய பணம்
கஞ்சா விற்பனை செய்தால் நிறைய பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினோம் என்றனர். மேலும் கஞ்சாவை ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தி வர கோயம்பேடு காய்கறி வண்டிகளை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. கைதான ஹரிபாபுவின் உறவினர்கள் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்ததும் தெரியவந்தது.

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா
மேலும் வாட்ஸ் ஆப் குழு அமைத்து கஞ்சா தேவைப்படும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கிராம் கஞ்சா ரூ 100க்கு விற்பனை செய்தனர். 1 கிலோ விற்பனை செய்து கொடுத்தால் ஐசக்கிற்கு ரூ 8000 கமிஷனாக கிடைக்குமாம். இதனால் குடும்ப வறுமையில் உள்ள மாணவர்களிடம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி கஞ்சா விற்பனையில் அவர்களை ஈடுபடுத்தியுள்ளனர்.

13 பேர் கைது
இதுகுறித்து தி நகர் காவல் துறை துணை ஆணையர் ஹரிகரன் பிரதாப் செய்தியாளர்களிடம் கூறுகையில் கஞ்சா விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த 13 பேரை கைது செய்துள்ளோம். 9 செல்போன்கள் பறிமுதல் செய்துள்ளோம். பைக் பறிமுதல் செய்துள்ளோம். கல்லூரி மாணவர்களுக்கு போதைபொருள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இந்த கஞ்சா கும்பலுக்கு வேறு யாருடனாவது தொடர்பிருக்கிறதா என விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications