தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகிறாரா கார்த்தி சிதம்பரம்?.. பரபரக்கும் சத்தியமூர்த்தி பவன்
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கார்த்தி சிதம்பரம் தேர்வு செய்யப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்திக்கு பிறகு அவருடைய மகன் ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அப்பதவியிலிருந்து விலகி விட்டார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வியுற்று வருவதால் நேரு குடும்பத்தை சேராத தலைவர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
“ஆபரேசன் தாமரை” குஜராத் தேர்தல் நேரத்தில் பாஜகவின் “மூவ்”! 2 நாளில் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் “ஜம்ப்”
காங்கிரஸ் கட்சி
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவும் சசி தரூரும் போட்டியிட்டனர். இதில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார். குஜராத் மாநில சட்டசபை தேர்தல் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தல்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் தலைமையில் நிகழ்ந்த மாற்றம் எந்த அளவுக்கு காங்கிரஸின் வளர்ச்சிக்கு கை கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
புதிய தலைவர் கார்கே
தற்போது புதிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே இமாச்சல பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அந்தந்த மாநில தலைவர் பதவிகளையும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரே தேர்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் விரைவில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் கே எஸ் அழகிரியின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதனால் அடுத்த தலைவர் யாரென்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதவியை எப்படியாவது பெற்றுவிட மூத்த தலைவர்கள் தீயாய் பணியாற்றி வருகிறார்கள்.
தம்பி வா தலைமையேற்க வா
இந்த நிலையில் தம்பி வா தலைமையேற்க வா என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்தை அழைத்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது கட்சியினுள் பரபரப்பை கிளப்பியுள்ளது. நவம்பர் 16 ஆம் தேதி பிறந்தநாள் காணும் கார்த்தி சிதம்பரத்தின் புகைப்படத்தையும் அவரது தந்தை ப.சிதம்பரத்தின் புகைப்படத்தையும் பயன்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தின் எழுச்சி நாள்
தலைவர் (கார்த்தி சிதம்பரத்தின் பிறந்த நாளான நவ.16) பிறந்தநாள், தமிழகத்தின் எழுச்சி நாள் என பொறிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தின் படமும் இருக்கிறது. அது போல் காமராஜர் கார்த்தியின் கைகளை பிடித்து அழைத்து செல்வது போன்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அடுத்த காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கார்த்தி சிதம்பரத்தை அழைப்பதாகவே பார்க்கப்படுகிறது.
மூத்த நிர்வாகிகள் மத்தியில் புகைச்சல்
இது மூத்த நிர்வாகிகள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி ஜோதிமணிக்கு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது. அவர் ராகுல் காந்திக்கு விசுவாசமானவர் என்பதாலும் சோனியா- ராகுல் குட் வில் புக்கில் ஜோதிமணி இடம்பெற்றுள்ளதாலும் அவருக்கு அந்த பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
கார்த்திக்கு வாய்ப்பிருக்கிறதா
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து சொற்ப இடங்களை பெற்று போட்டியிடும் நிலையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை போக்க காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சி தலைவராக அறிவிக்க அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சத்தியமூர்த்தி பவன் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது , கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள்தான் இந்த போஸ்டரை ஒட்டியிருந்தார். அதற்காக தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளே ஒட்டியதாக பொருள் கொள்ள முடியாது. அவரை விட மூத்த நிர்வாகிகள் கட்சியில் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது இளையவருக்கு எப்படி இந்த மிகப் பெரிய பொறுப்பை கொடுப்பார்கள் என கேள்வி எழுப்பினர்.
கூட்டணி
ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. எங்களுக்கு தர்மசங்கடம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அது போல் ஜோதிமணியும் கரூர் மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து குரல் கொடுத்து வந்ததாலும் செந்தில் பாலாஜியுடன் மோதல் போக்கை கொண்டதாலும் அவர் திமுகவுக்க தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.