கருணாநிதிக்கு முரசொலி மாறன் மனசாட்சி.. அப்போ, அன்பழகன் யார் தெரியுமா.. உருக்கமான தகவல்
சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தனது சகோதரியின் மகனான முரசொலிமாறனை, முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது மனசாட்சி என்று அழைப்பார். அதாவது, முரசொலி மாறனுக்கு தெரியாமல் கருணாநிதியிடம் எந்த ஒரு விஷயமும் கிடையாது என்பது இதற்கு அர்த்தம்.
Recommended Video
ஆனால் கருணாநிதியின் நிழல் போலவே எப்போதும் காணப்பட்ட அன்பழகனு,ம் கருணாநிதிக்குமான உறவை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், அது என்ன வார்த்தையாக இருக்கும்?
திமுகவிலிருந்து எம்ஜிஆர் விலகிய போதும், வைகோ விலகியபோதும் அந்த இயக்கத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்க கருணாநிதியும், அன்பழகனும் தோளோடு தோள் நின்று பணியாற்றியது திமுகவில் பலருக்கும் நினைவிருக்கலாம்.
போகாத ஊர் இல்லை
தமிழகத்தில் அன்பழகன் போகாத ஊர் கிடையாது. ஏறாத மேடை கிடையாது. அனைத்து மேடைகளிலும் திராவிட இன மானத்தை தூண்டும் வகையிலான எழுச்சி உரையாற்றுவார். அவரது பேச்சுக்கள், பழமைவாதத்தில் ஊறியவர்களை கூட திமுகவை நோக்கி ஈர்த்துவிட உதவும். அந்த அளவுக்கு ஆணித்தரமாக அவரது வாதங்கள் இருக்கும்.
திராவிட பேராசிரியர்
எத்தனையோ கல்லூரி பேராசிரியர்கள் இருக்கலாம். ஆனால் இவருக்கு மட்டும் பேராசிரியர் என்ற சொல் காலம் முழுவதும் தங்கிவிட்டதே, எப்படி? ஏன் என்றால் அவர் கல்லூரி பேராசிரியராக மட்டுமல்ல, திராவிட இயக்கத்தின் பேராசிரியராக இருந்தார். பொதுக்கூட்டங்களில் ஒரு பேராசிரியர் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்வதை போல கருத்துக்களை சொன்னார். அவர் கருத்துக்கு எதிர்கருத்து பேசுவதற்கு ஆளில்லாத நிலை இருந்தது. எனவேதான் அவர் கடைசிவரை பேராசிரியர் என்று அழைக்கப்பட்டு மறைந்தார்.
கருணாநிதி வார்த்தைகள்
இப்படி திராவிட இயக்கத்தின் ஒரு போர்வாள் போல செயல்பட்ட அன்பழகன், கருணாநிதிக்கு இடையே என்ன மாதிரி உறவு முறை? எந்த இடத்தில் அவரை வைத்து இருந்தார்? என்பதற்கு ஒரு சம்பவம் உள்ளது. கருணாநிதி, முதல்வராக இருந்தபோது வெளியிட்ட அறிக்கையில் இதை இப்படி குறிப்பிடுகிறார். நான் 60 லட்சம் திமுக தொண்டர்களின் தலைவனாக இருக்கலாம்.. 6 கோடி தமிழக மக்களின் முதல்வனாக இருக்கலாம்.. ஆனால் பேராசிரியரிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவையும் எடுப்பதில்லை. இது அவரது வயதுக்கு கொடுக்கும் மரியாதை மட்டுமல்ல, அவரது அனுபவத்துக்கும், அறிவுக்கும் மட்டுமல்ல. அவர் அண்ணன் என்பதாலும்தான் என்று கருணாநிதியே குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாவுக்கே ஆலோசனை சொன்ன அண்ணன்
ஆம்.. கருணாநிதியின் அண்ணன் என்ற இடத்தில்தான் அன்பழகன் வைக்கப்பட்டிருந்தார். கருணாநிதியை விட இரண்டு வயது மூத்தவர் என்பது மட்டுமே இதற்கு காரணம் கிடையாது. அறிஞர் அண்ணாவுக்கே பல கருத்துக்களை எடுத்துரைத்த, அறிவார்ந்த பேராசிரியர் என்பதாலும்தான் இந்த மதிப்பு. அதனால்தான் ஸ்டாலின் கூட, கருணாநிதி தனது தந்தை என்றால், அன்பழகன் தனது பெரியப்பா என்று அன்போடு அழைத்து வந்தார்.