கருணாநிதி பேனா.. நினைவிடங்கள் அறிவிக்கப்பட்ட இடுகாடு..தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அரசு சொன்ன பதில்
அறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்கள், சென்னை சிட்டி முனிசிபல் சட்டம் 1919 பிரிவு 319(3) படி அறிவிக்கப்பட்ட இடுகாடு என்று தெரிவித்துள்ளது.
சென்னை: அனைத்து விதமான ஒப்புதல்களும் பெற்ற பின்னரே கலைஞருக்கு மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு பொதுப்பணி துறை, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்கள், சென்னை சிட்டி முனிசிபல் சட்டம் 1919 பிரிவு 319(3) படி அறிவிக்கப்பட்ட இடுகாடு என்று தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பணியை போற்றும் வகையில், அவரின் நினைவிடத்திற்கு அருகே, கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. பேனாவை, ரூபாய் 81 கோடி செலவில், 42 மீட்டர் உயரத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பேனா சின்னம் அமைப்பதற்கு தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம், அனுமதி அளித்த நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக சமீபத்தில் மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதனிடையே திருச்செந்தூரைச் சேர்ந்த பி.ராம்குமார் ஆதித்தன் என்பவர் தென்மண்டல அமர்வில் கடந்த டிசம்பர் மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கடல் பகுதியை சூழலியல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதியாக அறிவிக்க வேண்டும். அந்தப் பகுதிகளில் மறைந்த தலைவர்களின் உடல்களைப் புதைக்க தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மெரினா கடல் பகுதியில் கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தடை கோரியும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக்கோரியும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
2 நாள் தான் ‛டைம்’.. ஈபிஎஸ் ஆலோசனையில் முக்கிய முடிவு..பொதுக்குழு உறுப்பினர்களுக்கு உத்தரவு! என்ன?
இந்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்கள், சென்னை சிட்டி முனிசிபல் சட்டம் 1919 பிரிவு 319(3) படி அறிவிக்கப்பட்ட இடுகாடு என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இருந்த நினைவிடத்தை தவிர கூடுதலான இடங்கள் நினைவிடமாக அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உடல் ஏற்கனவே உள்ள நினைவிட வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை மாநகராட்சி அனுமதிக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சி துறை கேட்டுக்கொண்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது எனவும் பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பதிலளித்துள்ள பொதுப்பணித்துறை, அனைத்து துறைகளின் அனுமதி பெற்ற பிறகே கடலில் பேனா சின்னம் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளது. மேலும் அனுமதி பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்திலும், மெரினா கடற்கரையில் இருந்து கடலுக்குள் 360 மீட்டர் தொலைவிலும் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ளது.
பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி ஒன்றிய, மாநில அரசுகளிடமும், கடற்கரை ஒழுங்கு ஆணையத்திடமும் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் பரிந்துரைகள் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் கடந்த 31ம் தேதி நடத்தப்பட்டது. அனைத்து துறைகளிடம் இருந்தும் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே பேனா நினைவு சின்னத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.