வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு.. அப்பீலுக்கு போக வேண்டாம்.. ஸ்டாலினுக்கு கருணாஸ் கடிதம்
முதல்வர் ஸ்டாலினுக்கு கருணாஸ் கடிதம் எழுதியுள்ளார்
சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று கோரிக்கை வைத்து முதல்வல் ஸ்டாலினுக்கு கருணாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தை டாக்டர் ராமதாஸ், கடந்த டிசம்பர் மாதம் கிளப்பியபோதே, பல்வேறு தரப்பில் இருந்து ஆதங்கங்கள் வெடித்தன. அதில் ஒருவர்தான் கருணாஸ்.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால், எங்களுக்கும் இடஒதுக்கீடு தர வேண்டும் என்று பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுத்திருந்தார் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி, கருணாஸின் வேண்டுகோளை கடைசிவரை கண்டுகொள்ளவே இல்லை.
சுமந்த் ராமன் சொன்ன மேட்டர்.. கூல் விளக்கம் திமுக அமைச்சர்.. பரபரக்கும் ட்விட்டர்.. என்னாச்சு?
இடமசோதா
இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியபோதுகூட தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.. இதனிடையே வன்னியர்களுக்கு 10.5.சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கிய அவசர சட்டத்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது. மீண்டும் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடுவதாக கூறியிருந்தது.. அப்போதும்கூட, இந்த வன்னியர் உள் இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று மீண்டும் கருணாஸ் வலியுறுத்தினார்...
இடஒதுக்கீடு
சமூகநீதியை போற்றுகின்றோம், சமூக நீதியை காக்கக்கூடிய அரசு என்று சொல்லக்கூடிய திமுக அரசு, அனைத்து சமுதாய மக்களுக்கான சமூக நீதியை காக்க வேண்டும். உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன் என்றும் பேட்டியும் அளித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு கருணாஸ் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் இதுதான்:
மேல்முறையீடு
"பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் தொடர் அரசியல் போராட்டத்திற்கும் எங்கள் அமைப்பு உள்ளிட்ட 60 சீர்மரபினர் சமுதாயத் தோழர்களின் உழைப்பிற்கும், உண்மையான சமூக நீதிக்கும் கிடைத்த வெற்றியாக கருதினோம்.
உச்சநீதிமன்றம்
ஆனால் மீண்டும் இதை, தமிழக அரசு மேல் முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் எடுத்துச் செல்வது வருத்தமளிக்கிறது. இதனால் சீர்மரபினர் பிரிவில் உள்ள பல்வேறு சமுதாய மக்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதை முதல்வருக்கு தெரிவித்துக்கொள்கிறோம். இடஒதுக்கீடு என்பது சமூக நீதி என்கிறபோது, உள் ஒதுக்கீடு என்று வருகிற போது சமூக அநீதியாக மாற்றமடைவது வேதனையளிக்கிறது. வன்னியர் அல்லாத சீர்மரபினர் தொகுப்பிலிருக்கும் மற்ற சமுதாயத்தினரின் கோரிக்கைகளையும் தமிழக முதல்வர் அவர்கள் முறையாக பரிசிலீக்க வேண்டும் என்பதே எங்களது தலையாயக் கோரிக்கையாகும்!
உள்ஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் அதாவது 68 சீர்பினர் சமுதாய தொகுப்பில் வன்னியர்களும் உள்ளனர். மொத்த இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிற நிலையில், இந்த 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மேலும் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியின் போது, அதாவது பிப்ரவரி 28 இல் நடைபெற்ற கடைசி நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்கினார்.
புலிப்படை கட்சி
இந்நிலையில் இந்த அவசரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் மனுதாரர் பாலமுரளி அவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சமுதாயத்தைச் சார்ந்த 60 தோழர்களும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பல்வேறு சாதிகள் உள்ளன. முறையாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதம் என கூறியிருந்தோம்.
கணக்கெடுப்பு
அதுமட்டுமின்றி சீர்மரபினரில் 28 சாதியினருக்கு 7.5 சதவீதமும், மீதமுள்ள 40 சமூகத்தினருக்கு 2.5 சதவீத உள் ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற சாதியைச் சேர்ந்த மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எங்களது மனுமீதான விசாரணை அடிப்படையில் 1.11.2021 இன்று மேற்கண்ட மனுக்களை நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.முரளிசங்கர் அமர்வு விசாரித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வேண்டுகோள்
மேலும் அந்த உத்தரவில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பல்வேறு சாதிகள் உள்ளன. அப்படியிருக்கும்போது முறையாக கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. எனவே தீர்ப்பின் உண்மையை உணர்ந்தும், சீர்மரபினரின் எதிர்காலம் உணர்ந்தும் தமிழக முதல்வர் இதை கையாளவேண்டும். ஆகவே இவ்வழக்கை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யக்கூடாது என்பதே எங்களது கோரிக்கையாகும்" என்று தெரிவித்துள்ளார்.