கரூரில் மட்டுமா.. ஒவ்வொரு ஊரிலும் விஜய் கூட்டத்தில் காயம் அடைந்தார்கள்.. பட்டியலை வெளியிட்ட ஏடிஜிபி!
சென்னை: தவெக சார்பாக நடத்தப்பட்ட விக்கிரவாண்டி மாநாடு தொடங்கி கரூர் பிரச்சாரக் கூட்டம் வரை காயம் அடைந்த மக்களின் எண்ணிக்கையை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் வெளியிட்டுள்ளார். அதன்படி கரூர் பிரச்சாரத்தில் மட்டும் இப்படி நடந்ததாக கூறிய விஜய்க்கு பதிலடியாக இது அமைந்துள்ளது.
தவெக தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் காரணமாக கடந்த 3 நாட்களாக அமைதியாக இருந்த விஜய், இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், கிட்டத்தட்ட 5 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.

ஆனால் கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மைகளும் நன்றாக தெரியும். அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரை சேர்ந்த மக்கள் உண்மையை சொல்லும் போது, எனக்கு கடவுளே வந்து உண்மையை கூறியது போல் இருந்தது. விரைவில் எல்லா உண்மைகளும் தெரிய வரும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் தமிழக அரசின் ஊடகப்பிரிவு செயலாளர் அமுதா ஐஏஎஸ் தலைமையில் சுகாதாரச் செயலர் செந்தில், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டேவிட்சன் தேவாசீர்வாதம் பேசுகையில், தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் எல்லா மாவட்டங்களிலும் தாமதமாகவே நடைபெற்றது.
அதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநாட்டில் 14 பேர் காயம் அடைந்தனர்.. விழுப்புரத்தில் விழுப்புரத்தில் 42 பேரும், திருச்சியில் 12, அரியலூரில் 6 பேரும் காயமடைந்தனர். விக்கிரவாண்டி மாநாட்டில் 42 பேர் காயம் அடைந்தனர். அதேபோல் நாமக்கல் பிரச்சார கூட்டத்தில் 34 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 17 பேரும், நாகையில் 5 பேரும், கரூரில் 116 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கரூரில் விஜய் பரப்புரைக் கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என தவெக சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை வந்திருக்கலாம் என்று தெரிகிறது. அதேபோல் கரூரில் தவெகவினர் மீது போலீசார் எந்த தடியடியும் நடத்தவில்லை.
வேலுச்சாமிபுரம் 60 அடி சாலையாகும். அதனால் இரு புறமும் மக்கள் வெளியேறுவதற்கான இடம் இருந்தது. அவர்கள் நினைத்திருந்தால் எளிதாக வெளியேறி இருக்க முடியும். விஜய்யை பார்க்க வேண்டும் என்பதால், யாரும் விலகிச் செல்லவில்லை என்று தெரிவித்தார். ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் பதில் விஜய்க்கு பதிலடியாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications