பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லையா? கஸ்தூரிக்கு பாஜகவின் கதவு மூடப்பட்டது.. எஸ்.வி. சேகர் கண்டனம்
சென்னை: நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மூத்த நடிகர் எஸ்வி சேகர்.. கஸ்தூரிக்கு, தமிழ்நாட்டில் பாஜகவின் கதவு மூடப்பட்டுவிட்டது என்றும் ஆந்திராவிலும் கஸ்தூரி மீது வழக்கு தொடுத்துள்ளதாகவும், எஸ்வி சேகர் காட்டமாக கூறியிருக்கிறார்.
பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதில் கலந்துக்கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்கு உரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

கஸ்தூரியின் இந்த பேச்சு சர்ச்சையானது.. இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.. இதையடுத்து, நடிகை கஸ்தூரி தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.
கஸ்தூரி வருத்தம்: அதில் "நான் கூறிய கருத்துகள் குறிப்பிட்ட சில நபர்களை குறித்து பேசியதே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்தை பற்றி நான் பேசவில்லை.. எனது தெலுங்கு குடும்பத்தை புண்படுத்துவது எனது நோக்கமாக இருந்ததில்லை நான் கூறிய கருத்துக்காக வருத்துகிறேன். அனைவரின் நலன் கருதி 3 நவம்பர் 2024 அன்று ஆற்றிய உரையில் தெலுங்கு மக்கள் குறித்து நான் பேசிய அனைத்து கருத்துகளையும் திரும்ப பெறுகிறேன்" என்றெல்லாம் தன்னுடைய வருத்தத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கஸ்தூரி சொன்னது தவறு என்று பாஜக ஆதரவாளரும், மூத்த நடிகருமான எஸ்.வி.சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது எஸ்வி சேகர் சொன்னதாவது:
எஸ்வி சேகர் கண்டனம்: "நடிகை கஸ்தூரியின் பேச்சு மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வது தவறு. தமிழகத்தில் சுமார் 10 கோடி பேர் இருக்கிறார்கள். சில இடங்களில் குடும்ப உறுப்பினர்களே ஒருவரை ஒருவர் கொலை செய்கின்றனர். அதற்காக தமிழகம் முழுவதும் அப்படி நடப்பதாக சொல்ல முடியுமா?
ஒரு இடத்தில் நடப்பதை வைத்து பொதுப்படையாக முயற்சிக்க கூடாது. இனப்படுகொலை என்ற வார்த்தையை சில மாதங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.. அதனால், அதைப்பற்றி பேசினால் பாஜகவில் அண்ணாமலை தனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பார் என்று நினைத்து கஸ்தூரி பேசியிருக்கிறார்..
தனிக்கட்சி: ஆனால், தமிழ்நாட்டில் பாஜகவின் கதவு கஸ்தூரிக்கு மூடப்பட்டது.. ஆந்திராவிலும் கஸ்தூரி மீது வழக்கு தொடுத்துள்ளனர்.. இனி கஸ்தூரி தனியாக கட்சி ஆரம்பித்து என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்" என்று காட்டமாக கூறியிருக்கிறார் எஸ்வி சேகர்.












Click it and Unblock the Notifications