ஸ்டார் தொகுதி: குஷ்பு vs எழிலன்.. ஆயிரம் விளக்கில் யாருக்கு வெற்றி வாய்ப்பு.. கள நிலவரம்
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் மருத்துவர் எழிலனும், அஇஅதிமுக கூட்டணி சார்பில் பாஜகவின் குஷ்புவும் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த தொகுதியில் களநிலவரம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்
நடுத்தர வர்க்கம், படித்த மற்றும் பணக்காரர்கள் அதிகம் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுகவே இதுவரை அதிகம் முறை (8முறை) வென்றுள்ளது.
கடந்த 20 வருடங்களை எடுத்துக் கொண்டால் திமுகவின் மீதான அதிருப்தி அலை எழுந்த 1991 மற்றும் 2011ல் மட்டுமே வென்றது.
மற்றபடி எப்போதுமே திமுகவே வென்றுள்ளது. இந்த தொகுதி திமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. இதை குஷ்பு உடைப்பாரா அல்லது திமுகவே வெல்லுமா என்பது மே2ம் தேதி தெரிந்துவிடும்.
மூன்று முறை வெற்றி
ஆயிரம் விளக்கு தொகுதியில் 1996ம் ஆண்டு தொடங்கி 2001, 2006 ஆகிய மூன்று முறை திமுக தலைவர் முக ஸ்டாலின் வெற்றி பெற்ற தொகுதியாகும். 2011ம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக திடீரென தொகுதி மாறிய ஸ்டாலின் கொளத்தூரில் வென்றார். 2016லும் கொளத்தூரில் வென்ற ஸ்டாலின், தற்போது மூன்றாவது முறையாக கொளத்தூரிலேயே போட்டியிடுகிறார்.
பாஜக வளர்ந்துள்ளது
ஆயிரம் விளக்கு தொகுதி நிலவரத்திற்கு வருவோம், ஆயிரம் விளக்கில் 2011ல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வளர்மதி 67522 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் திமுகவின் ஹசன் முகமது ஜின்னா 59930 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். அந்த தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகள் 3098 வாக்குகள் ஆகும். ஆனால் 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட குக செல்வம் 61,726 பெற்று வெற்றி பெற்றார். இவர் தற்போது பாஜகவில் சேர்ந்துவிட்டார். வளர்மதி 52,897 வாக்குகள் பெற்று இரண்டாது இடத்தையே பிடித்தார். பாஜக 8516 வாக்குகள் வாங்கி மூன்றாவது இடத்தை பிடித்தது.
குஷ்பு போட்டி
ஆயிரம் விளக்கு தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் வெற்றி வித்தியாசம் என்பது 8829 வாக்குகள் ஆகும். கிட்டத்தட்ட அந்த வாக்குகளைத்தான் பாஜக கடந்த முறை பெற்றிருந்தது. அதிமுக, பாமகவின் கூட்டணி ஆதரவுடன் இங்கு போட்டியிட்டால் அந்த வாக்கு வித்தியாசம் மாறி வெற்றிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் பாஜக களம் இறங்கி உள்ளது. அதன்படி தான் பாஜகவின் சார்பில் வலுவான வேட்பாளரான குஷ்பு, ஆயிரம் விளக்கில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
முதல்முறை போட்டி
பிரபல நடிகையான குஷ்பு, திமுக மற்றும் காங்கிரஸில் இருந்து பாஜகவிற்கு வந்தவர். யாருக்கும் அஞ்சாமல் எந்த கருத்தையும் துணிச்சலாக வெளிப்படுத்தக்கூடியவர். முதல்முறையாக சட்டசபை தேர்தலில் களம் இறங்கி உள்ளார். எல்லோரிடமும் வசீகரமாக பேசக்கூடியவர் என்பது குஷ்புவின் பலம். குஷ்பு திமுகவின் அரசியலை நன்கு அறிந்தவர் என்பதுடன் பாஜக மேல்மட்ட அளவில் செல்வாக்கு உள்ளவர், சிறுவயது முதலே வறுமையை வென்று உயரத்தை அடைந்தவர் என்பதால் எல்லா பிரச்சனைகளையும் கையாளக்கூடியவர் என்பதால் வேட்பளராக அவருக்கு பெரும் பலம்.
நாகநாதன் மகன்
அதேநேரம் திமுகவும் சாதாரண வேட்பாளரை ஆயிரம் விளக்கில் களம் இறக்கவில்லை. மருத்துவர் எழிலனை இறக்கிவிட்டுள்ளது. பேராசிரியர் மு.. நாகநாதன், மறைந்த கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர். இலவச டிவி .. இதுதான் இன்று வரை திமுகவை தூக்கி நிறுத்தி வைத்திருக்கும் ஒரு அடையாளமாக உள்ளது. தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையே புரட்டிப் போட்ட பல கட்சிகளுக்கு முன்னுதாரணமாக திகழும் பல்வேறு இலவச அறிவிப்புகளை தனது தேர்தல் அறிக்கையில் இடம் பெற வைத்து திமுகவுக்கு உயர்வு கொடுத்தவர்தான் நாகநாதன். அவரது மகன்தான் டாக்டர் எழிலன்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு
சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் எழிலன். கருணாநிதியின் கடைசிக்காலத்தில் அவருடனேயே இருந்தவர். காவிரி மருத்துவமனையில் பொது மருத்துவராக இருக்கும் எழிலன், நீட் விவகாரத்தில் மிகத் தீவிரமாக செயல்பட்டவர். இவருக்குத்தான் ஆயிரம் விளக்கு தொகுதியில் சீட் கொடுத்துள்ளது திமுக. எழிலன் டாக்டர் எழிலன், "இளைஞர் இயக்கம்" என்ற அமைப்பையும் நிறுவி நடத்தி வருகிறார். ஈழத் தமிழர் பிரச்சினைக்காக உரக்க குரல் கொடுத்தவர். கூடங்குளம், நெடுவாசல் என அனைத்து சமூகப் பிரச்சினைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருபவர்... சேலம் எட்டு வழிச்சாலை போராட்டத்திலும் தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்து வந்துள்ளார்.
நிச்சயம் வெல்வோம்
அண்மையில் பேட்டி அளித்த எழிலன் "அடிப்படையில் ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை. மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு கழகப் பணியாளர்கள் முன்பிருந்தே ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த உழைப்பை வாக்குகளாகப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். சமூகச் செயற்பாட்டளாரான நான் முன்பு சொல்கிற இடத்தில் இருந்தேன். தற்போது செய்கிற இடத்துக்கு வந்துள்ளேன். அதற்கான முழுமையான வாய்ப்பை மக்கள் அளிப்பார்கள் என்று நம்புகிறேன். திமுகவின் தேர்தல் அறிக்கை நிச்சயம் வெற்றி தரக் கூடியது. தேர்தல் களத்தில் குஷ்பு சினிமா பிரபலம் என்பது அவருக்குச் சாதகமான ஒன்றுதான். குஷ்புவைப் பெண்ணியவாதியாக நான் மதிக்கிறேன். நான் எனது சமூகப் பணியை நம்புகிறேன். மக்கள் பணி அளவுகோலாக வரும்போது நல்ல போட்டியாக அமையும் என்று கருதுகிறேன்" என்றார்.
பாஜக திட்டம்
குஷ்பு கூறும் போது, ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்பது வரலாறு ஆகிவிட்டது. நான் ஆயிரம் விளக்கு தொகுதியின் முக்கிய பிரச்னைகளை கண்டறிந்துள்ளேன். அங்கு பல காலமாக திமுக கோலோச்சியிருந்தாலும், வறுமை குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு முறையான கல்வி என்பது எட்டாக்கனியாக இருக்கிறது. இந்த பிரச்னையை நான் சரிசெய்வேன். நான் ஒரு பெண், ஒரு குடும்பத்தின் பிரச்னைகள் என்ன என ஒரு இல்லத்தரசியாக, ஒரு தாயாக எனக்கு நன்றாக தெரியும். நான் தற்போது வசதியான வாழ்க்கையை வாழ்கிறேன். ஆனால் என் சிறு வயது முதல் ஏழ்மை, வறுமையை அறிந்திருக்கிறேன். அதனால் கல்வி மூலம் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு மேம்படும் என்பதை அவர்களுக்கு உணர்த்துவேன். கல்வி தேவைகளை பூர்த்திசெய்வேன் என்ற உறுதியுடன் வாக்காளர்களை சந்திப்பேன்" என்றார்.