கொடநாடு வழக்கில் 4 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்...எடப்பாடி முகத்துக்கு நேராக கேட்ட முதல்வர் ஸ்டாலின்
ஜெயலலிதாவின் மரணம் குறித்த கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார். அது தேவையில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: கொடநாடு வழக்கு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. கொடநாடு வழக்கு, ஜெயலலிதா மரண வழக்கு தமிழ்நாட்டு மக்களை பெரும் குழப்பத்துக்கு ஆளாக்கி உள்ளது என்று திமுக எம்எல்ஏ சட்டசபையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, அவைக்குறிப்பில் இருந்து எம்எல்ஏ கூறியவைகளை நீக்க வேண்டும் என்றார். அது தேவையில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதால் விவாதத்தில் அனல் பறந்தது.
தமிழக சட்டசபை கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்றைய அவையின் தொடக்கத்தில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழர்களின் நாகரீகத்தை உலகறியச் செய்ய பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையடுத்து காவல்துறை கொள்கை விளக்கக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், தமிழ் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. பாலியல் வன்கொடுமை. வரதட்சணை மரணம். கணவர் மற்றும் அவரது உறவினர்களால் கொடுமைப் படுத்துதல் போன்ற குற்றங்களில் 2019ஆம் ஆண்டு முதல் 2021 ஜூன் வரை 4,967 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

திமுக எம்எல்ஏ பேச்சு
இது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு பதில் அளித்து பேசிய திமுக எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன், காவல்துறை என்பது நெருப்பு போன்றது. திமுக ஆட்சியில் திருவண்ணாமலை தீபமாக எரியும். எதிர்கட்சி ஆட்சியில் சொல்ல வேண்டியதில்லை. காட்டுத்தீயா? குடிசை தீயா? என்பது ஆட்சியில் இருப்பவர்களை பொருத்தது என்று கூறினார்.

முதல்வர் ஸ்டாலின்
மேலும், 'காசு பணம் துட்டு மணி மணி' என்று கடந்த காலங்களில் பாடிக் கொண்டு இருந்தவர்களை 'குற்றம் புரிந்தவர்கள் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பது ஏது' என முதல்வர் ஸ்டாலின் பாடவைத்துவிட்டதாகவும் ஈஸ்வரப்பன் கூறவே அவையில் சிரிப்பலை எழுந்தது.

துப்பாக்கிச்சூடு
தமிழ்நாடு காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், காவல்துறை மீது கரும்புள்ளி ஏற்படும் வகையில் சாத்தான்குளம் சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு போன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக குறிப்பிட்டு பேசினார். அதேபோல் கடந்த காலங்களில் செயின் பறிப்பு சம்பவங்களும், மகளிர் வெளியே செல்லாமல் முடங்கி கிடைக்கக்கூடிய சூழலும், கூலிப்படை வைத்து கொலை செய்வதும் தொடர்கதையாக நடந்ததாகவும் குறிப்பிட்டார்.

இபிஎஸ் எதிர்ப்பு
அச்சமயம் கொடநாடு வழக்கு, ஜெயலலிதா மரண வழக்கு தமிழ்நாட்டு மக்களை பெரும் குழப்பத்துக்கு ஆளாக்கி உள்ளது என்று தெரிவித்தார். திமுக உறுப்பினர் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து பேசினார், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை அவையில் பேசுவது மரபு அல்ல என குறிப்பிட்டார். ஜெயலலிதாவின் மரணம் குறித்த கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நீக்க வேண்டிய அவசியமில்லை
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, வழக்கு விவரத்தை சுதர்சனம் பேசவில்லை; வழக்கு நடைபெறுவதை தான் பேசுகிறார். வழக்கில் யார் மீது சந்தேகம் இருக்கிறது என்பது பற்றி எல்லாம் பேரவையில் பேசவில்லை என்று தெரிவித்தார். அந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றுதான் கூறியுள்ளார். கொடநாடு பற்றிய திமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் பேச்சை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.

சட்டசபையில் விவாதம்
கொடநாடு வழக்கு விவகாரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. மறைந்த முதலமைச்சர் கொடநாட்டில் இருந்து அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார். கொடநாடு பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் கழற்றப்பட்டது எப்படி? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
Recommended Video

முதல்வர் ஸ்டாலின் கேள்வி
கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் ஏன் கேமரா மாயமானது என்பது பற்றியும் கொலை கொள்ளை குறித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா மறைந்த உடன் அந்த சொத்து தனியார் வசம் சென்று விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறினார். தனியார் சொத்துக்கு நாங்கள் எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும் என்று கேட்ட எடப்பாடி பழனிச்சாமி. தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே தங்கள் மீது பழி சுமத்தியதாகவும் கூறினார்.

சட்டசபையில் அனல்
கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று மீண்டும் கொடநாடு வழக்கு பற்றி சட்டசபையில் பேசியுள்ளார் திமுக எம்எல்ஏ சுதர்சனம்.












Click it and Unblock the Notifications