மனு கொடுத்த ரெண்டே வாரத்தில் டெய்லரிங் மிஷின்! - ஸ்டாலின் உதவியால் நெகிழ்ந்த குடும்பத் தலைவிகள்!
சென்னை: பார்தெலெமி திமோனியர் என்பவரால் 1830 ஆம் ஆண்டு முதன்முதலாக தையல் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. 'டெய்லரிங் மிஷினை கண்டுபிடித்தவர் யார்?' என்று கேட்டால், அதனைப் பயன்படுத்தும் பலருக்கும் பதில் தெரிய வாய்ப்பில்லை.
ஆனால், 'அந்த மிஷினை கொளத்தூரில் உள்ள பல ஏழைக் குடும்பங்களுக்கு கொடுத்தது யார்?' என்று கேட்டால், 'முதலமைச்சர் ஸ்டாலின்' என அப்பகுதி மக்கள் உடனே பதில் சொல்வார்கள்.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக தையல் இயந்திரக் கனவில் ஏங்கித் தவித்த ஏழைகளின் வீட்டுக்கு அந்த மிஷினை கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் ஸ்டாலின்.
''தங்களுக்குக் கிடைத்த ஒரு தையல் மிஷின், தலையெழுத்தையே மாற்றி இருக்கிறது'' என்கிறார், குடும்பத் தலைவி பிரேமா. இவர் கொளத்தூர் தொகுதியில் உள்ள திரு.வி.க நகர் கோபாலபுரத்தில் வசிக்கிறார்.

வீடு தேடி வந்த அதிசயம்
''எப்படி இந்த மாற்றம்?'' என்றோம். "டெய்லரிங் கிளாஸ் படித்திருக்கிறேன். வீட்டில் சிரமமான சூழலில் இருப்பதால் மிஷின் வாங்க முடியவில்லை. குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும்; வீட்டுச் செலவுகளையும் பார்க்க வேண்டும். என் கணவரின் வருமானத்தை வைத்துக் கொண்டு மிஷின் வாங்க முடியவில்லை.
ஒருமுறை முதலமைச்சர் ஸ்டாலின் இந்தத் தொகுதியில் ஆஸ்பத்திரி ஒன்றைத் திறக்க வந்தார். எங்க ஏரியாவில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுவில் இருக்கிறேன். அதனால் முதலமைச்சரைப் பார்த்து ஒரு மனுவைக் கொடுத்தோம். அவரிடம் நேரடியா கொடுத்ததால், எங்களுக்கு 10 நாளுக்குளாகவே முதலமைச்சர் ஆபீசில் இருந்து போன் வந்தது.
'நீங்க டெய்லரிங் மிஷின் கேட்டு முதலமைச்சரிடம் மனு கொடுத்திருக்கீங்க. உங்களுக்கு மிஷின் கொடுக்க இருக்காங்க. நேரில் வாங்க' என்று சொன்னார்கள். உடனே போய் சந்தித்தோம். குறைந்தது 20 நாள்களிலேயே மிஷின் கிடைத்துவிட்டது. நாங்க சாதாரண மிஷின்தான் எதிர்பார்த்தோம். ஆனால், எங்களுக்கு பவர் மிஷினே கொடுத்துவிட்டார்கள்.
அதனால் ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இப்ப இந்த மிஷினை வைத்து நானே தையல் தொழில் செய்து சம்பாதிக்கிறேன். என் குழந்தைகளுக்குத் தேவையான உடைகளை நானே தைத்து கொடுக்கிறேன். டெய்லரிங் தொழிலில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, என் கணவரின் உதவி இல்லாமலே என் பிள்ளைகளுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுக்கிறேன்" என்கிறார், புதிய தொழில் முனைவோராக மாறியுள்ள பிரேமா.
இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். இளைய மகன், 6 ஆம் வகுப்பு படிக்கிறான். இவரது இரண்டாம் மகனுக்குப் படிப்புக்கான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதிலும் நிதிச்சுமை குறைந்துள்ளதாகக் கூறுகிறார் பிரேமா.
மேலும், ''முன்பெல்லாம் உதவி வேண்டும் என்றால் அம்மா வீட்டுக்குப் போகவேண்டும். அதற்கும் கணவரின் உதவியைத்தான் நாடி நிற்க வேண்டிய நிலை இருந்தது. இப்போது என்னால் சுயமாக செலவுகளைப் பார்த்துக் கொள்ள முடிகிறது'' என்கிறார்.

செலவு இல்லாமல் படிக்கும் மகள்
''அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் வழங்கப்பட்டுள்ளதால், தாய் வீட்டுக்குச் செல்லும்போது குறைந்தது 100 ரூபாய் மிச்சமாகிறது. அந்தத் தொகையும் வீட்டுச் செலவுக்காகப் பயன்படுத்த முடிகிறது'' என்கிறார் பிரேமா.
இவரது திருமணத்தின்போது முதலமைச்சராக மு.கருணாநிதி இருந்துள்ளார். அவரது ஆட்சியில் இவருக்குத் திருமண உதவித் தொகையாக 8 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. இவருக்கு, இரண்டாவது மகன் பிறந்தபோது அரசிடம் இருந்து 12 ஆயிரம் ரூபாயை உதவித் தொகையாகப் பெற்றுள்ளார்.
ஒரு வீட்டில் உள்ள ஒருவருக்கு மட்டும் இத்தனைப் பயன் தரும் திட்டங்கள் போய்ச் சேந்திருக்கின்றன. அதற்கான ஒரே அத்தாட்சியாக இருக்கிறார், கொளத்தூரில் வசிக்கும் குடும்பத் தலைவி பிரேமா.
இவரைப் போன்று இன்னொரு பயனாளி விஜி. இவரும் கொளத்தூர் திரு.வி.க நகரைச் சேர்ந்தவர்தான். இவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு பையன் உள்ளனர். மகள் 3 ஆம் ஆண்டு கல்லூரி படிக்கிறார். மகன் 11 ஆம் வகுப்பு படிக்கிறான். இவருக்கும் பல ஆண்டு கனவு, ஒரு தையல் மிஷின் வாங்க வேண்டும் என்பது.
"இரண்டு பிள்ளைகள் படிக்கிறார்கள். குடும்ப செலவையும் பார்த்துக் கொண்டு மிஷின் வாங்க முடியாத நிலை இருந்தது. இப்படியே 20 வருடங்களாக கனவைத் தள்ளிப் போட்டு வந்துள்ளார்.

ஒரே வாரத்தில் நிறைவேறிய 20 வருடக் கனவு
''கொளத்தூர்தான் முதலமைச்சரின் தொகுதி. அவரிடம் மனு கொடுத்தால் கட்டாயம் செய்வார் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது. அவரிடம் மனு எழுதிக் கொடுத்த ஒரே வாரத்தில் வீடு தேடி டெய்லரிங் மிஷின் வந்து சேர்ந்துள்ளது.
நான் என் கணவரிடமே, 'நீங்க வாங்கி தரமாட்டீங்க. முதலமைச்சர் ஸ்டாலினே கொடுத்துடுவார் பாருங்க' என்றேன். அதே மாதிரி நடந்துவிட்டது" என்கிறார் விஜி. அதாவது 20 வருடக் கனவை ஒரு வாரத்துக்குள் நிறைவேற்றித் தந்துள்ளார், முதலமைச்சர் ஸ்டாலின்.
"சாதாரண மிஷின் வாங்கிக் கொடுத்தால் காலால் மிதிப்பதற்குக் கஷ்டமாக இருக்குமே என நினைத்துக் கொண்டே இருந்தோம். ஆனால், எங்க தேவையை உணர்ந்து பவர் மிஷினையே முதலமைச்சர் கொடுத்தார். அது எனக்குப் பெரிய ஆச்சரியம்" என்கிறார்.
இதையடுத்து நம்மிடம் பேசிய மஞ்சுளா என்பவர், "பக்கத்து வீட்டில் டெய்லரிங் மிஷின் ஓடும்போது ஏக்கமா பார்த்துக் கொண்டே இருப்பேன். நாங்க இருப்பதே வாடகை வீடுதான். ரொம்ப கஷ்டம். ஒரு மிஷின் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை. அப்போதுதான் பக்கத்து வீட்டுக்காரர்கள் சொன்னார்கள். 'மகளிர் சுயஉதவிக் குழு மூலமாக எழுதிக் கொடுக்கிறார்கள். நீயும் எழுதிக் கொடு' என்றார்கள்.
எனக்கு முதல்ல யோசனையா இருந்தது. நமக்குத் தருவாங்களா? மாட்டாங்களா? என தயக்கம். ஆனால் கொடுத்த ஒரு வாரத்துக்குள் போன் வந்தது. என் வீட்டுக்காரரிடம்தான் செல்போன் இருக்கிறது. அவரிடம்தான் முதலில் சொன்னார்கள். வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷம்.
'நமக்கு ஒரு மிஷின் இருந்தால் நாலு காசு சம்பாதிக்கலாமே?' என ஒரு காலத்தில் நினைத்தேன். அந்தக் கனவை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார்.

ஏற்றம் தந்த இயந்திரம்
டெய்லரிங் மிஷின் வந்த நாளிலிருந்து எல்லா செலவுக்கும் என் கணவரை நான் எதிர்பார்ப்பது இல்லை. இன்று நான் பத்து ரூபா சுயமா சம்பாதிக்கிறேன் என்றால் அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின்தான் முழுக் காரணம்" என்கிறார்.
மஞ்சுளாவுக்கு இரண்டு மகன்கள். ஒரு மகன் படித்து முடித்துவிட்டு தற்போதுதான் வேலைக்குப் போகத் தொடங்கி உள்ளார். மகள், கிண்டியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கும் பேருந்து இலவசம் என்பதால் வீட்டின் செலவு குறைந்திருக்கிறது. தினம் 100 ரூபாய் வரை முன்பு செலவானது. இப்போது இலவச பேருந்து பயணத்தால் கையிருப்பு மிச்சமாகிறது.
''யார் உதவியையும் எதிர்பார்க்காமல் என் மகள் கல்லூரிக்குப் போகிறாள்'' எனக் கூறும் மஞ்சுளாவுக்கு புதிய டெய்லரிங் மிஷின் வந்த நாள் முதலாக புதிய மனுஷியாக மாறி இருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications