குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் நிரந்தரமாக லைசென்ஸை கட் செய்யுங்கள்! கொங்கு ஈஸ்வரன் புது யோசனை!
சென்னை: குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் நிரந்தரமாக லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு புது யோசனை வழங்கியிருக்கிறார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்.
குடித்து விட்டு வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் சம்மந்தமே இல்லாத அப்பாவி பொதுமக்கள் உயிர் பாதுகாக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;

பெண் பார்த்து விட்டு
அண்மையில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாசியர் அலுவலகம் அருகே மகனுக்கு பெண்பார்த்துவிட்டு திரும்ப வந்து நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதிய விபத்தில் அப்பாவி பொதுமக்களின் உயிர் இழப்பு பற்றி அனைவரும் அறிந்ததே. விபத்தின் போது அந்த ஓட்டுனர் இருந்த நிலை சம்பந்தமாக சமூக வலைதள பக்கங்களில் வந்த வீடியோவை பார்த்தால் மனம் மிகவும் வேதனை அடைகிறது. மிகவும் போதையான நிலையில் வாகனத்தை ஓட்டி வந்து ஒரு குடும்பமே நிற்கதியான சூழ்நிலைக்கு தள்ளிய அவருக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அது மிகையாகாது.

ஆய்வு இல்லை
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பின்னர் தற்போதைய காலகட்டத்தில் மது அருந்திவிட்டு வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டுவதை கொரோனா பரவல் பாதுகாப்பு காரணங்களுக்காக காவலர்கள் ஆய்வு செய்வது குறைந்துள்ளதாக தெரிய வருகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு இதுவே ஒரு ஊக்கமாக அமைந்து விடுகிறது. இதன் காரணமாக அதிகமான விபத்துக்கள் ஏற்படுகிறது.

குடிபோதையில் விபத்து
இதுபோன்ற விபத்துகளில் குடிபோதையில் இருக்கும் ஓட்டுநர் மட்டுமல்லாமல் ஓட்டுநரின் குடும்பம் மற்றும் சாலை ஓரத்தில் செல்லும் சம்மதமே இல்லாத பலரும், அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களும் இதனால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்திய நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான இரண்டு சக்கர வாகன விபத்துகள் தமிழ்நாட்டில் நடைபெற்று உள்ளது என்கிற புள்ளி விபரங்களை பார்க்கும் பொழுது மனம் இன்னும் வேதனை அடைகிறது.

விபத்து அதிகரிப்பு
2021 ஆம் ஆண்டில் அதிக வேகம் காரணமாக நாட்டில் ஏற்பட்ட சாலை மொத்த விபத்து இறப்புகள் 87,050 அதில் தமிழகத்தில் 11,419 ஆகும். இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் 13.1% பதிவு செய்துள்ளது வருந்தத்தக்கது.அதிக வேகமாக செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் போதையில் வாகனங்களை இயக்கும் காரணங்களாலே அதிகமான விபத்துக்கள் ஏற்படுவதை பொதுமக்கள் கண்கூடாக காண்கின்றனர்.

நிரநதரமாக ரத்து செய்க
மிகவும் தான்தோன்றித்தனமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து உயிரிழப்புகளை ஏற்படுத்துபவர்களுக்கு அபராதம் மட்டும் அல்லாமல் நிரந்தரமாக ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால்தான் சம்மந்தமே இல்லாத அப்பாவி பொதுமக்கள் உயிர் பாதிக்கப்படாமலும், தமிழகத்தில் விபத்தால் ஏற்படும் மரணங்களும் குறைய வாய்ப்பாக இருக்கும் என தமிழக அரசை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications