கே.டி. ராகவன் வீடியோ.. அண்ணாமலை நியமித்த குழு.. விசாரணையை அதிரடியாக துவங்கியது மலர்க்கொடி டீம்
கேடி ராகவன் புகார் மீதான விசாரணை தொடங்கி உள்ளது
சென்னை: கே.டி.ராகவன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புக்குழு தன்னுடைய விசாரணையை நேற்று முதல் தொடங்கி நடத்தி வருகிறது.
தமிழக பாஜக பொதுச்செயலாளராக பதவி வகித்த கே.டி.ராகவன், அரை நிர்வாண கோலத்தில் வாட்ஸ்அப் வீடியோ காலில் ஒரு பெண்ணிடம் ஆபாசமான செயலில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தன்னுடைய பதவியை ராகவன், வீடியோ வெளியான கொஞ்ச நேரத்துலேயே ராஜினாமா செய்துவிட்டார்.. இந்த வீடியோவை பதிவிட்ட மதன் ரவிச்சந்திரன் என்பவரும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவருடன் தொடர்புடைய வெண்பா என்பவரும் நீக்கப்பட்டுவிட்டார்.

விசாரணை
இந்நிலையில், கே.டி.ராகவன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக பாஜக மாநிலச் செயலாளர் மலர்க்கொடி தலைமையில் சிறப்புகுழுவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று நியமித்தார்.. இதையடுத்து, உடனடியாக இந்த குழு ஆரம்பகட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளது.

பேட்டி
இதுதொடர்பாக மலர்க்கொடி சொன்னபோது, "கே.டி.ராகவன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கியிருக்கிறேன்... இந்த விசாரணைக் குழுவில் மேலும் சிலர் இணைய உள்ளனர்... அவர்களை மாநிலத் தலைவர் அண்ணாமலை விரைவில் அறிவிப்பார்... குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள கே.டி.ராகவன், வீடியோவில் பேசும் பெண் மற்றும் இதில் தொடர்புடைய அனைவரிடமும் தொடர்ந்து விசாரிப்போம்.

குழு
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலைக்கு இதுபோன்ற குற்றங்கள் எப்படி, யாரால் நிகழும் என்பதெல்லாம் நன்றாக தெரியும்... அவர் எங்கள் விசாரணை குழுவுக்கு ஆலோசனைகள் வழங்குவார். தவறு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது" என்றார்.

புகார்
இந்நிலையில் கே.டி.ராகவன் மீதான விசாரணை நடைபெறும் பட்சத்தில் அவர் கைதாவாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.. காரணம் வீடியோ வெளியான அன்றே, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சென்னை கமிஷனர் அலுவலகத்தில், தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திரபாபுவை சந்தித்து பாஜக கட்சியின் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தின் கீழ் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்திருந்தார்.

குஷ்பு
அதபோல, பாஜகவின் பிரமுகரான குஷ்புவும், தேசிய பாஜகவிலும் சரி, தமிழக பாஜகவிலும் சரி, எனக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டுத்தான் வருகிறது... ஆனால் இங்கு நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இது விசாரிக்கப்பட வேண்டிய ஒரு விவகாரம் என்பதையும் குறிப்பிட்டு சொல்லி உள்ளார்... அதுமட்டுமல்லாமல் திமுக அரசை பொறுத்தவரை, பெண்களுக்கான பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

மணிகண்டன்
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.. அப்படித்தான் மாஜி அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.. சிவசங்கர் பாபா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. அந்த வகையில், கேடி ராகவன் மீதான சந்தேகத்திற்கு இடமின்றி புகார் உறுதியாகும் பட்சத்தில், நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. அதேசமயம், சட்டப்படி உறுதி செய்யப்படாத எந்த விஷயத்தையும் திமுக கையில் எடுப்பதுமில்லை.. விசாரணை குழு முடிவில்தான் தெரியவரும்..!












Click it and Unblock the Notifications