வாகன இன்சூரன்சுக்கு லைசென்ஸ் கட்டாயம்! சென்னை வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
சென்னை: வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும்போது உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா? என பார்க்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்கக்கூடாது என அறிவுறுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள தனியார் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தவர் தினேஷ்குமார். இவர் கடந்த 2019 ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு, சகோதரர் திலீப்குமாருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

திருவள்ளூரை அடுத்த சென்னேரி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தினேஷ்குமார் உயிரிழந்தார்.
இதையடுத்து ஒன்றரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி தினேஷ்குமாரின் பெற்றோர் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி சந்திரசேகரன் விசாரித்தார். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை என்றாலும், மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதால், இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரர்களுக்கு 64 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய் இழப்பீட்டை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி அடிப்படையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் இன்சூரன்ஸ் செய்யும்போது வாகன உரிமையாளருக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதை இன்சூரன்ஸ் நிறுவனம் பார்க்க வேண்டும் எனவும், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்க கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications