பாஜகவுடன் கசந்த உறவு! எட்டி கூட பார்க்காத தைலாபுரம்! அதிமுகவிற்கு திடீரென 5 சிக்கல்கள்.. ரொம்ப லேட்
சென்னை: தமிழ்நாட்டில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 4 முக்கியமான சவால்களை எதிர்கொள்ளும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. தொடர் குழப்பங்களால் ரத்தத்தின் ரத்தங்கள் பலர் "ஆல் இஸ் நாட் வெல்" என்று விரக்தியில் இருக்கிறார்களாம்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆளும் கட்சியான திமுக சட்டசபை தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. இன்று திமுக சார்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் மாலையில் ஆன்லைன் வழியாக நடக்க உள்ளது. விரைவில் அக்கட்சி வேட்பாளர்களையும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. மக்களே உஷார்.. உங்க கையில் அதிகபட்சம் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்?
அதிமுக சிக்கல்
ஆனால் பிரதான எதிர்கட்சியான அதிமுகவோ அவ்வளவு ஆர்வமாக இந்த தேர்தலை எதிர்நோக்கி இல்லை என்றுதான் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அட போங்க.. இப்போ எலக்சன் ஒன்னுதான் குறை என்று சொல்லும் அளவிற்கு நிர்வாகிகள் கடும் விரக்தியில் இருக்கிறார்களாம். வேட்பாளர் தேர்வு, கூட்டணி பங்கீடு, தேர்தல் செலவு, கோஷ்டி மோதல் என்று பல்வேறு விஷயங்கள் அதிமுக தரப்பிற்கு இந்த தேர்தலில் சிக்கலாக மாறி உள்ளதாம். தேர்தலையே வேண்டா வெறுப்பாகத்தான் பல நிர்வாகிகள் எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.. அதிமுகவிற்கு எப்படி என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம்.
சிக்கல் 1 - பாஜக உறவு
முதல் விஷயம் பாஜகவுடனான சமீபத்திய கசப்பான நிகழ்வுகள். அதிமுக எம்எல்ஏக்களை ஆண்மை இல்லாதவர்கள் என்று பாஜகவின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்தார் . இதற்கு அவர் விளக்கம் அளித்துவிட்டார். அதோடு அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி சமாதானம் செய்துவிட்டார். ஆனாலும் அதிமுக - பாஜக கூட்டணி முன்பு போல "நண்பேன்டா" மோடில் இருக்க வாய்ப்பு இல்லை என்றே ரர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உறவு கசந்துவிட்டது.. ஆனாலும் கூட்டணி தொடரும் என்ற நிலைப்பாட்டில்தான் அதிமுக இருப்பதாக கூறப்படுகிறது.
களத்தில் வேலைகள்
இதனால் நகராட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை, இடஒதுக்கீட்டில் பிரச்சனை, தேர்தல் வேலைகளை களத்தில் செய்வதில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலே டாப் நிர்வாகிகள் போனில் பேசி சமாதானம் செய்யலாம். ஆனால் களத்தில் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகள் ஒன்றாக வேலை பார்க்க மாட்டார்கள். இணையத்தில் பாஜக - அதிமுக நிர்வாகிகள் நேற்றுதான் கடுமையாக மோதிக்கொண்டனர். இன்றே களத்தில் வேலை பார்க்க சொன்னால் எப்படி பார்ப்பார்கள் என்ற கேள்வி நிர்வாகிகள் இடையே நிலவுகிறதாம்.
சிக்கல் 2 - பாமக கண்டுகொள்ளவில்லை
இது போக இன்னொரு முன்னாள் கூட்டணி கட்சியான பாமகவும் அதிமுகவை எட்டி பார்க்கவே இல்லை. முதலில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் மட்டுமே பாமக தனியாக நிற்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அதன்பின்தான் மொத்தமாக பாமக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது. இப்போது வரை தைலாபுரம் தரப்பு அதிமுகவிற்கு எந்த விதமான கூட்டணி சிக்னலும் கொடுக்கவில்லையாம்.. அதிமுகவை பாமக பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.. வன்னியர் இடஒதுக்கீட்டால் ஏற்கனவே தென் மாவட்டத்தில் அதிமுக முக்குலத்தோர் வாக்குகளை இழந்துவிட்டது. இப்போது பாமகவும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் வடமாவட்டங்களிலும் அதிமுக பெரிய அடி வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இது எதிரொலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்கல் 3 - உட்கட்சி பூசல்
இதெல்லாம் வெளிப்புற பிரச்சனை என்றால் உட்புறம் அதிமுகவில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. ஓபிஎஸ் - இபிஎஸ் நிர்வாகிகள் இடையிலான மோதல் ஒரு பக்கம். அன்வர் ராஜா உள்ளிட்ட பல நிர்வாகிகளை வரிசையாக நீங்கியதால் ஏற்பட்ட குழப்பம் ஒரு பக்கம். அதிமுகவில் சத்தமின்றி சசிகலா கேம்ப் பார்க்கும் உள்ளடி வேலைகள் இன்னொரு பக்கம் என்று பல பக்கங்களில் அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் நிலவுகிறது. நிர்வாகிகள் இடையே அவ்வளவு ஒற்றுமை இல்லை. இதெல்லாம் சேர்ந்து கண்டிப்பாக தேர்தல் பணிகளை பாதிக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிக்கல் 4 - ரொம்ப லேட்
மேலும் அதிமுக இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பெரிதாக தயாராகவில்லை. கடந்த டிசம்பரில்தான் இதற்கான விருப்ப மனுக்களை வாங்கியது. ஆனால் அதையும் கூட அதிமுக தலைமை பெரிதாக இதுவரை சோதனை செய்யவில்லை. விரும்ப மனு கொடுத்தவர்களில் பிரபலம் ஆனவர்களையும், மாவட்ட செயலாளர்களுக்கு நெருக்கம் ஆனவர்களையும் அதிமுக கண்ணை மூடிக்கொண்டு டிக் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறதாம். தேர்தல் இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் ஏற்கனவே ரொம்ப லேட் ஆகிவிட்டதால் அதிமுக நாளை அல்லது நாளை மறுநாள் வேட்பாளர் பட்டியலை அவசரமாக வெளியிடும் என்று கூறப்படுகிறது.
Recommended Video
சிக்கல் 5 - பணம் இல்லை
இதெல்லாம் போக தேர்தலுக்கு செலவு செய்ய அதிமுகவின் டாப் தலைகள் விரும்ப மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. திமுக ஆட்சியில் இருக்கிறது.. இப்போது நகராட்சி, மாநகராட்சி போஸ்டிங்கை செலவு செய்து வென்று ஒன்றும் செய்ய முடியாது. ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டால் பணத்தை வெளியே எடுக்க முடியவில்லை . பல மாஜிகள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். இப்போது தேவையின்றி பல லட்சங்களை செலவு செய்ய அதிமுக தலைகள் யாரும் விரும்பவில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தேர்தலை அதிமுக கொஞ்சம் உற்சாகம் இன்றியே எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது.