வேகமெடுக்கும் பணிகள்.. டிசம்பர் இறுதிக்குள் நிச்சயம் உள்ளாட்சி தேர்தல்.. அமைச்சர் கே என் நேரு உறுதி
சென்னை: வரும் செப்டம்பர் 15க்குள் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலும் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் நகர்ப்புற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகு சில ஆண்டுகள் வரை தேர்தல் நடைபெறாமல் இருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, 3 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு 2019இல் தான் நடத்தப்பட்டது. அதிலும்கூட ஊரகப் பகுதிகளில் மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டன.

நீதிமன்றம் உத்தரவு
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கிலும்கூட வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் இது குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைகூட நடத்தினார்.

ஆலோசனை
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். இன்று அமைச்சர் கே என் நேரு தலைமையில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விடுபட்ட மாவட்டங்களில் ஊரக தேர்தல்
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நேரு, "வரும் செப்டம்பர் 15க்குள் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். அதன்படி தேர்தல் நடத்தப்படும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம், மகளிர் இட ஒதுக்கீடு போன்றவற்றில் குளறுபடிகள் உள்ளதாகப் புகார் எழுந்துள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
இந்த புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை முதல்வர் விரைவில் சட்டசபையில் அறிவிப்பார். ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். அதற்காக வாக்காளர் பட்டியல் சரிசெய்யும் பணிகள் உள்ளிட்ட தேவையான பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications