"குடியை கெடுக்கும் அதிமுக அரசு.. கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி" கருப்பு உடையில் முக ஸ்டாலின் கண்டனம்
திமுக தலைவர் முக ஸ்டாலின் கருப்பு கொடி போராட்டம் நடத்தினார்
சென்னை: 'கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசை கண்டிக்கிறோம் என்றும்,"நோய்த்தடுப்பில் அலட்சியமும் மது விற்பதில் அவசரமும் காட்டும் #குடியைக்கெடுக்கும்அதிமுக அரசினை எதிர்த்து கருப்புச் சின்னம் அணிந்து கோஷம் எழுப்பினோம்" என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருப்பு சட்டை, கருப்பு பேண்ட், கருப்பு ஷூ, கருப்பு கொடி, கருப்பு மாஸ்க் சகிதம் மதுக்கடைகளுக்கு எதிரான தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார் ஸ்டாலின்!!
Recommended Video
'மதுக் கடைகள் திறப்பதை கண்டித்து, தமிழக மக்கள், இன்றைய தினம் கருப்பு சின்னம் அணிந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்' என, திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, மதிமுக பொதுச்செயலர் வைகோ, உள்ளிட்ட திமுக கூட்டணி தலைவர்கள் அறிக்கையும் வெளியிட்டிருந்தனர்.
உபகரணங்கள்
"கொரோனா நோய் தொற்றில் இருந்து, மக்களை காப்பாற்ற வேண்டிய டாக்டர்கள், நர்ஸ்கள், துாய்மை பணியாளர்கள், போலீஸ் துறையை சேர்ந்தவர்கள் பலரும், சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையில், தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கள வீரர்களான அவர்களுக்கு கூட, பாதுகாப்பு உபகரணங்களை வழங்காத, தமிழக அரசை கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், மீட்பு நடவடிக்கை பற்றி கவலைப்படாமல், மது கடைகளை திறப்பதில் மட்டும், ஆர்வத்துடன் செயல்படும், தமிழக அரசை கண்டிக்கிறோம்.
நிதியுதவி
மாநில அரசு கேட்ட நிதியை, மத்திய அரசு வழங்காததையும் கண்டிக்கிறோம். எனவே, மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக, நாளை ஒரு நாள் மட்டும், கருப்பு சின்னம் அணிய வேண்டும்.காலை, 10:00 மணிக்கு, தமிழக மக்கள், அவரவர் வீட்டின் முன், ஐந்து பேருக்கு அதிகமாகாமல், 15 நிமிடங்கள் நிற்க வேண்டும் .அப்போது, 'கொரோனாவை ஒழிப்பதில், தோல்வி அடைந்த, அ.தி.மு.க., அரசை கண்டிக்கிறோம்'என, முழக்கமிட்டு, கலைய வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர்.
கருப்பு கொடி
அதன்படியே இன்று திமுக & கூட்டணி கட்சி சார்பில் எதிர்ப்பு காட்டப்பட்டது.. முக ஸ்டாலின் கருப்பு கலர் சட்டை, கருப்பு கலர் பேன்ட் முகத்தில் கருப்பு கலர் மாஸ்க் அணிந்து வீட்டின் முன்பு நின்றார்.. ஒரு கையில் மதுக்கடைக்கு எதிரான பதாகை, இன்னொரு கையில் கருப்பு கொடியை ஏந்தியிருந்தார் ஸ்டாலின்.. ஊரடங்கு காலத்திலும் மதுக்கடை எதற்கு என்று அந்த பதாகையில் எழுதப்பட்டிருந்தது.
உதயநிதி ஸ்டாலின்
ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் கையில் கருப்பு கொடியை ஏந்தி நின்றார்.. அந்த பக்கம் உதயநிதி இந்த பக்கம் துர்கா ஸ்டாலின் நின்று மதுக்கடைகளுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.. இவர்களுடன் ஸ்டாலினின் மருமகன் உட்பட குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அனைவருமே சமூக இடைவெளியை கடைப்பிடித்தவாறு விலகி நின்று இந்த முழக்கத்தை முன்வைத்தனர்.. திறக்காதே திறக்காதே.. திறக்காதே.. மதுக்கடைகளை திறக்காதே.. திறக்காதே திறக்காதே மக்கள் வாழ்வை சீரழீக்கும் மதுக்கடைகளை திறக்காதே என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆழ்வார்பேட்டை
முன்னதாக, திமுக தலைவர் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பை காட்ட போகிறார் என்ற செய்தி பரவியதுமே ஆர்வ கோளாறினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை வீட்டில் குவிந்து விட்டனர்.. இதை பார்த்தும் ஸ்டாலின் அவர்களை அறிவுறுத்தி சமூக விலகலை கடைப்பிடிக்க சொன்னார்.. பின்னர், ஸ்டாலின் முழக்கமிடும்போது, அந்த தெரு முழுவதுமே தொண்டர்கள் சமூக விலகலை கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆவேச முழக்கம்
இந்த போராட்டம் சம்பந்தமாக முக ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர், பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. "நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மதுக்கடைகளைத் திறந்து, சமூகத்தின், குடும்பங்களின் அமைதியைக் குலைக்கத் தயாராகும் #குடியைக்கெடுக்கும்அதிமுக அரசுக்கு நம் எதிர்ப்பைக் காட்டுவோம்.. 'கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க. அரசைக் கண்டிக்கிறோம்' என முழங்குவோம்! "நோய்த்தடுப்பில் அலட்சியமும் மது விற்பதில் அவசரமும் காட்டும் #குடியைக்கெடுக்கும்அதிமுக அரசினை எதிர்த்து கருப்புச் சின்னம் அணிந்து கோஷம் எழுப்பினோம்" என்று பதிவிட்டுள்ளார்.