போராடி பெற்ற மைக் சின்னம்- சீமான் அறிவிக்கும் போது "வெறுப்பேற்றிய" 'மாமனாருக்கு ரத்த கொதிப்பு' சாங்!
சென்னை: லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் பெரும் போராட்டத்துக்குப் பின்னர் ஒருவழியாக மைக் சின்னம் கிடைத்திருக்கிறது. நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் கிடைத்திருப்பதை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ஒலித்த "மாமனாருக்கு ரத்த கொதிப்பு" பாடலின் ரிங்டோன் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகளை கடும் கோபமடைய வைத்தது.
நாம் தமிழர் கட்சிக்கு முதலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் கொடுக்கப்பட்டது. பின்னர் அடுத்தடுத்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனையே நாம் தமிழர் கட்சியினர் தங்களது நிரந்தர சின்னமாகவும் கருதி வந்தனர்.

ஆனால் தற்போதைய லோக்சபா தேர்தலில் திடீரென கரும்பு விவசாயி சின்னமானது கர்நாடகாவின் லெட்டர் பேடு கட்சி ஒன்றுக்கு ஒதுக்கப்பட்டது. இது நாம் தமிழர் கட்சியை கடும் அதிருப்தி அடைய வைத்தது. இதனையடுத்து சட்டப் போராட்டங்களை நாம் தமிழர் கட்சி மேற்கொண்டுள்ளது. இதனிடையே லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் சின்னத்தை பெற்றாக வேண்டிய கட்டாயமும் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது.
இதனால் பெரும் போராட்டத்துக்குப் பின்னர் 'மைக்' சின்னத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. தமிழர்களின் இடிதாங்கி -வலி தாங்கி அண்ணன் சீமானுக்கு கிடைத்திருப்பது 'ஒலி வாங்கி' (மைக்) என அடுக்கு மொழியில் நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தவும் தொடங்கி விட்டனர்.
தங்களுக்கு மைக் சின்னம் கிடைத்திருப்பதை சீமான் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார். அப்போது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் சீமான் வெளியிட்டார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்த ஒரு சம்பவம் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரை கொதிக்க வைத்துவிட்டது. அதாவது சீமான் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசத் தொடங்கினார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் சீமானுக்கு பின்னால் நின்றிருந்த ஒருவரின் செல்போன் ரிங் டோன், ரத்த கொதிப்பு எங்க மாமனாருக்கு ரத்த கொதிப்பு என்கிற பாடலுடன் ரொம்பவே சப்தமாக அலறியது. இதனால் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ரொம்பவே கோபமடைய 'ரத்த கொதிப்பு' பாடல் ரிங்டோன் நபர் அங்கிருந்து வேகமாகவே வெளியேறியும் விட்டார்.












Click it and Unblock the Notifications