2 மாதத்தில் 3-வது முறையாக பிப்.18-ல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி- கொங்கு ‘தலைகள்’ கட்சி தாவல்?
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் 2 மாதங்களில் 3-வது முறையாக பிப்ரவரி 18-ந் தேதி தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகை தருகிறார் பிரதமர் மோடி. திருப்பூர் பல்லடத்தில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி முன்னிலையில் கொங்கு அரசியல் கட்சிகளின் சில சீனியர்கள் பாஜகவில் இணைவதற்கான வேலைகளும் ஜரூராக நடப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தல் தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2-வது வாரம் வரை லோக்சபா தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் லோக்சபா தேர்தல் பணிகளில் முழு வீச்சில் களமிறங்கி உள்ளன.

இதனிடையே பிரதமர் மோடி 2 மாதங்களில் 3-வது முறையாக பிப்ரவரி 18-ந் தேதி தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகை தர உள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 2-ந் தேதி பிரதமர் மோடி திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் பிரதமர் மோடி அந்நிகழ்ச்சியில் உரையாற்றினார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் அந்நிகழ்ச்சியில் இரங்கல் தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி 2-வது முறையாக ஜனவரி 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்டார். கேலோ விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்துவிட்டு ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். இந்தியாவின் தென்முனை தொடங்கும் தனுஷ்கோடிக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார்.
தற்போது 3-வது முறையாக பிப்ரவரி மாதம் 18-ந் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை தர உள்ளார் என்கின்றன பாஜக வட்டாரங்கள். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு கட்டங்களாக நடத்திய என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு நிகழ்ச்சிகள் திருப்பூர் பல்லடத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைப்பார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் பிரதமர் மோடியின் பிப்ரவரி 18-ந் தேதி நிகழ்ச்சியில் கொங்கு மண்டலத்தில் அரசியல் கட்சிகளில் ஓரம் கட்டப்பட்ட அல்லது அதிருப்தியில் இருக்கும் சில சீனியர்களை பாஜக பக்கம் கொண்டு வருவதற்கான வேலைகளையும் பாஜக தரப்பு ஜரூராக மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிரதமர் மோடியின் பிப்ரவரி 18-ந் தேதி வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications