லவ் ஃபெயிலியர்.. கொலையில் முடிந்த “மைனர்” காதல் - ரயில் முன்பு தள்ளி “போலீஸ்” மகள் கொலை! பின்னணி
சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ரயில் முன் தள்ளி கொன்றுவிட்டு தப்பிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் கொல்லப்பட்ட சத்யா மற்றும் அவரை கொன்ற சதீஷ் ஆகியோர் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (20). இவரது தாய் ராமலட்சுமி சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த சத்யா தனது குடும்பத்தோடு சிறு வயதிலிருந்தே வசித்து வந்திருக்கிறார். அப்போது அதே பகுதியை சதீஷ் (23) என்ற இளைஞருக்கும் சத்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

மைனர் காதல்
நாளடைவிலேயே அது காதலாக மாறி இருக்கிறது. சந்தியாவும் சதீஷும் கடந்த சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவருடைய வயதையும் அடிப்படையாக வைத்து பார்த்தால் அவர்கள் மைனராக இருக்கும்போதே ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியுள்ளார்கள் என்றே தெரிகிறது.

காதல் தோல்வி
தற்போது சத்யா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களாக சதீஷுக்கும் சத்யாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. சதீஷின் நடவடிக்கை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி சத்யா அவரை தவிர்க்க தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மனம் உடைந்த சதீஷ் சத்யாவை பல முறை பின் தொடர்ந்து சமாதானம் செய்ய முயன்றிருக்கிறார்.

வழக்குப்பதிவு
ஆனால் சத்யா அதற்கு உடன்படவில்லை என்று கூறப்படுகிறது. தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து சதீஷ் சந்தியாவிடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஒரு முறை சத்யா படித்து வந்த கல்லூரிக்கு சென்றே சதீஷ் அவரை தாக்கியும் இருக்கிறார். இதற்காக கடந்த ஜூலை மாதம் அவர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தள்ளிவிட்ட சதீஷ்
இந்த நிலையில் இன்று சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் சென்ற சத்யாவை சந்தித்து அவரை சமாதானம் செய்ய முயன்றுள்ளார் சதீஷ். அப்போது இருவருக்கும் திடீரென சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. கோபத்தின் உச்சிக்கு சென்ற சதீஷ் (23) ஓடிக்கொண்டிருந்த ரயில் முன்பு சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார்.

சத்யா மரணம்
அந்த சமயத்தில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயிலில் மோதிய சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தலை துண்டான நிலையில் தண்டவாளத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த சத்யாவின் உடலை கண்ட ரயில் நிலையத்தில் காத்திருந்த ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

போலீஸ் விசாரணை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவியை ரயில்முன் தள்ளிவிட்டு கொலை செய்த அவரது காதலன் சதீஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சதீஷை 2 தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications